Skip to main content

நீர் வரத்து அதிகரிப்பு!! மேட்டூர் அணை மூன்றாவது முறையாக நிரம்புகிறது!

Published on 22/10/2019 | Edited on 22/10/2019


மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளதோடு, நீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், இந்தாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.


தமிழகத்தின் முக்கிய அணைகளுள் ஒன்றான மேட்டூர் அணைக்கு நீர் வரத்து என்பது கர்நாடகா மாநிலத்தின் மழைப்பொழிவை நம்பியே இருக்கிறது. கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கர்நாடகா மாநிலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பின. இதனால் உபரி நீர் முழுவதும் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்டது.

 

Mettur Dam fills for the third time! Increase in arrival !!



இந்த தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. தொடர்ச்சியான மழைப்பொழிவு, நீர் வரத்து இருந்ததால் கடந்த செப். 7ம் தேதி மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் முதன்முதலாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன்பிறகு டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்ட நிலையில், கர்நாடகாவில் மழைப்பொழிவு குறைந்தது. நீர் வரத்து சரிந்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டமும் சரியத்தொடங்கியது. என்றாலும் அடுத்த சில நாள்களில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால் செப். 24ம் தேதி இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.


அதன்பிறகும் நீர்வரத்து கணிசமாக குறைந்ததால் மேட்டூர் அணை நீர் மட்டம் மளமளவென சரியத் தொடங்கியது. கடந்த அக். 17ம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 113.03 அடியாக சரிந்தது. அன்று நீர் வரத்து வினாடிக்கு 8347 அடியாக இருந்தது. இந்நிலையில், மீண்டும் கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியதால், நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.


கடந்த 18ம் தேதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 34722 கனஅடியாக இருந்தபோது நீர்மட்டம் 114.830 அடியாக உயர்ந்தது. அக். 21ம் தேதி 117.80 அடியாகவும், செவ்வாய்க்கிழமை (அக். 22) காலை 8 மணி நிலவரப்படி 118.60 அடியாகவும் இருந்தது. இரவு 8 மணியளவில் நீர்மட்டம் 119.33 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 27000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதேநேரம் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீரும், மேற்கு கால்வாய் வழியாக 350 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், விடிவதற்குள் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி, இந்தாண்டில் மூன்றாவது முறையாக அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவுறுத்தியுள்ளார்.


புதன்கிழமை (அக். 23) காலை முதல் அணையில் இருந்து உபரி நீர் பவர் ஹவுஸ் வழியாக 22 ஆயிரம் கனஅடியும், 16 கண் மதகுகள் வழியாக 5000 கன அடியும் வெளியேற்றப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆந்திர அரசின் முடிவுக்கு அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம்! 

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Minister Duraimurugan strongly condemns Andhra govt decision

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள சாந்திபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (26.02.224) குப்பம் சாந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ. 215 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் பாலாற்றில் ஆந்திர அரசு சார்பில் புதிய தடுப்பணை கட்டுவதற்குத் தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டுவதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ஆந்திர அரசு அடிக்கல் நாட்டியுள்ளதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892 ஆம் ஆண்டு மதராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். கடந்த 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும் நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது. இந்த ஒப்பந்தம் ஆற்றுப் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று  உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அளித்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு தீர்ப்பு இருக்கையில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும் உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட செயலாகும். இது ஒரு தவறான முயற்சியாகும். மேலும் இதற்கு முன் சித்தூர் மாவட்டம் கணேசபுரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு அணையைக் கட்ட முயற்சித்தபோது அச்செயலை ஆட்சேபித்து தமிழ்நாடு அரசு 10.02.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. இவ்வழக்கில் இரு மாநில சாட்சியாளர்களது குறுக்கு விசாரணை 2018-ல் முடிவடைந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது.

இதற்கிடையே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து இருப்பதை எதிர்த்து மற்றும் ஒரு சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. இந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு 2 அசல் வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையைக் கட்ட முயற்சிப்பதும், அதற்காக அதனுடைய நிதிநிலை அறிக்கையில் (Budget) பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும். இச்செயல் இரு மாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல. மேலும் கூட்டாட்சிக்கு எதிரானது. ஆகையால் ஆந்திர அரசு இந்த அணை கட்டும் பிரச்சினை குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, இம்மாதிரியான எந்தவித செயல்களையும் மேற்கொள்ளக் கூடாது என இரு மாநிலங்களின் நலன் கருதி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
CM MK Stalin order to open water in Mettur Dam

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று (03.02.2024) முதல் இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 59 ஏக்கரும், என மொத்தம் 22 ஆயிரத்து 774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீரை இன்று (03.02.2024) முதல் திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே. விவசாயிகள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.