Skip to main content

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது; 43வது முறையாக 120 அடியை தொட்டு சாதனை!

Published on 07/09/2019 | Edited on 07/09/2019

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை இன்று (செப். 7, 2019) பகலில் எட்டியது. 43வது முறையாக முழு கொள்ளளவை எட்டி சாதனை படைத்துள்ள நிலையில், ஏராளமான பொதுமக்கள் கடல்போல் நிரம்பியிருக்கும் அணையின் கண்கொள்ளா காட்சியை கண்டு ரசித்து வருகின்றனர். 

 

mettur dam filled

 

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியைத் தொட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 13ம் தேதியன்று டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணையைத் திறந்து வைத்தார். அப்போது நீர் வரத்து கணிசமான அளவில் இருந்ததால், அடுத்த சில நாள்களில் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென்று கர்நாடகா மாநிலத்தில் மழைப்பொழிவு குறைந்ததால், நீர் வரத்தும் படிப்படியாக குறைந்தது. 

அணையின் நீர்மட்டம் 117 அடியாக இருந்தபோது, நீர் வரத்தைக் காட்டிலும் பாசனத்திற்காக நீர் திறப்பது அதிகமாக இருந்தது. இதனால் அணை முழுவதும் நிரம்புவதில் மேலும் தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால், அங்குள்ள கேஆர்எஸ், கபினி அணைகள் நிரம்பின. இதையடுத்து பாதுகாப்பு கருதி அவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

அதன்படி, நேற்று கேஆர்எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 52807 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 22692 கன அடி தண்ணீரும் என மொத்தம் 75499 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்து சேர்ந்த இந்த தண்ணீர், ஒகேனக்கல் காவிரி வழியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து சேர்கிறது. 

 

mettur dam filled

 

இன்று (செப். 7, 2019) காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 119.34 அடியாக இருந்தது. இந்நிலையில், பகல் 1.09 மணியளவில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் அணை பரந்த கடல்போல் காட்சி அளிக்கிறது. 

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு அணையையொட்டி தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் குடும்பத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக தண்டோரா மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அணைப்பகுதியில் நின்று கொண்டு அலைபேசியில் தற்படம் எடுக்கக்கூடாது என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேட்டூர் அணை 43வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 32500 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 700 கன அடியும் என மொத்தம் 32700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது அணை முற்றிலும் நிரம்பியுள்ள நிலையில், நீர்வரத்து முழுவதும் அப்படியே பாசனத்திற்காக திருப்பி விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

கடல்போல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணையை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்ப்பதற்காக திரண்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் அமல்” - டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
D.K.Sivakumar said Meghadatu plan will be implemented when the Congress government is established in central

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

இதற்கிடையே, விரைவில் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், “தேவையான அனுமதிகளை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்கான ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்படவுள்ளன. தேவையான அனுமதிகளை கொடுத்தால் விரைவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும். பெங்களூர் நகரில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம். மேகதாது அணை விரைவில் கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலையொட்டி, கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போது, மேகதாது திட்டத்திற்காக போராட்டம் நடத்தினோம். அதற்கு பணிந்து அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க ரூ.1,000 கோடி ஒதுக்கியது. பெங்களூரில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. மேகதாது திட்டத்தை அமல்படுத்தினால்தான் பெங்களூருக்கு குடிநீர் வழங்க முடியும். அதனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம். இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பயன் கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றமும் ஆதரவாக கருத்து கூறியுள்ளது” என்று கூறினார்.