Metro rail between Chennai Airport and kilambakkam TN govt approves

சென்னை கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைக்கப்பட்டது. இந்தப் புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டது. இந்தப் பேருந்து முனையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையான 15. 46 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை அரசியிடம் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்குத் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதோடு மெட்ரோ ரயில் வழித்தடத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்குச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் மத்திய அரசின் ஒப்புதலுக்காக இந்த உத்தரவு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் மத்திய அரசு வழங்கும் அனுமதிக்குப் பிறகு இந்த வழித்தடத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

முன்னதாக கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையம் அருகே பயணிகள் வசதிக்காக, வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே புதிய புறநகர் ரயில் நிலையம் அமைப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகத்துடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை மேற்கொண்டது. அப்போது சென்னை கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையம் அருகே பயணிகள் வசதிக்காக புதிய ரயில் நிலையம் அமைக்கத் தமிழக அரசு வைத்த கோரிக்கையை ரயில்வே துறை ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து புறநகர் ரயில் அமைப்பதற்கான முழுச்செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்வதாக ஒப்புதல் வழங்கி இருந்தது. அதன்படி புதிய ரயில் நிலையம் அமைக்கத் தமிழக அரசு முதற்கட்டமாக 40 லட்ச ரூபாயை ரயில்வே துறைக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.