‘தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம்

Meteorological Department announced Chance of heavy rain again in southern districts'

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வலுவான வடகிழக்கு காற்று மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் மழைக்குச் சாதகமான சூழல் நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, தமிழ்நாடு, புதுசேரி மற்றும் காரைக்காலில் நேற்று முதல் (26.12.2023) 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நாளை (28-12-23) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் நாளை (28-12-23) ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போல், நாளை மறுநாள் (29-12-23) கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள்மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்த வகையில், வருகிற டிசம்பர் 31ஆம் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் 2 நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் அண்மையில் தென் தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதீத கன மழை காரணமாகப் பல இடங்கள் வெள்ளத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

rain
இதையும் படியுங்கள்
Subscribe