Met Dept informs Red Alert withdrawn in Chennai

Advertisment

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை (17.10.2024) அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் வானிலை ஆய்வு மையம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த நான்கு மாவட்டங்களில் ஒரு இடங்களில் மிக கன மழை பெய்யக்கூடும் எனவே இங்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது என வானிலை மையம் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வரக்கூடிய நிலையில் தற்போது சென்னைக்கு 190 கிலோ மீட்டர் கிழக்கு - தென் கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெல்லுருக்கு தென்கிழக்கில் 270 கிலோமீட்டர் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு 200 கிலோமீட்டர் கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரும் வேகம் 17 கிலோமீட்டர் ஆக சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.