Skip to main content

ஜெ.வுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுவதில் விதிமீறலோ, சட்டவிரோதமோ இல்லை - ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்

Published on 31/10/2018 | Edited on 31/10/2018
me


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லை என்பதால், அரசு செலவில் அவருக்கு நினைவிடம் கட்டுவதில் விதிமீறலோ, சட்டவிரோதமோ இல்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.


சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செலவில் நினைவிடம் கட்டுவதை தடை செய்யக்கோரி ஆர்.கே.நகர் வேட்பாளரும், தேசிய மக்கள் கட்சித் தலைவருமான எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்திருந்தார்.


அந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஹுலுவாடி ஜி. ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசனின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

 

அந்த பதில் மனுவில், ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட 2016 டிசம்பர் 7ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டு, 2018 ஜனவரி 10ஆம் தேதி 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் மே 7ஆம் தேதி நாட்டப்பட்டது. அதனால் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவது அரசின் முடிவு அதிகார வரம்புக்கு உட்பட்டதுதான். 

 

அதுமட்டுமல்லாமல், மாநில கடலோர மேலாண்மை மண்டல ஒழுங்குமுறை ஆணையம், மாநகராட்சி என அனைவரிடமும் அனுமதி பெறப்பட்டுள்ளது. நினைவிடம் கட்டுவதில் விதிமீறல், சட்டவிரோதம் ஏதுமில்லை. அதுமட்டுமல்லாமல் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் மற்ற மூவர் மீதான தண்டனை உறுதிசெய்யப்பட்டாலும், அப்போது ஜெயலலிதா இறந்துவிட்டதால் தண்டனை கைவிடப்பட்டது. எனவே ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல. அந்த தீர்ப்பின் அடிப்படையில்தான், சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் வைத்ததை எதிர்த்த மனுவும் தலைமை நீதிபதி அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல இந்த வழக்கும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதையடுத்து, இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  அதனையேற்ற நீதிபதிகள் வழக்கை நவம்பர் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய இபிஎஸ் (படங்கள்)

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர். 

 

 

Next Story

மெரினாவில் சீறிப் பாய்ந்த சொகுசு கார்கள்! மடக்கி பிடித்த போலீஸ் 

Published on 12/03/2023 | Edited on 12/03/2023

 

Luxury cars in the marina! The police who got wrapped up

 

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று காலை போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டதாக அதிநவீன சொகுசு கார்களை சென்னை போக்குவரத்து போலீஸார் பிடித்து அபராதம் விதித்தனர்.  

 

சென்னையைச் சேர்ந்த தனியார் கார் பராமரிப்பு நிறுவனம் தனது நிறுவனத்தின் ஒரு நிகழ்ச்சிக்காக வெளி மாநிலங்களைச் சேர்ந்த சொகுசு கார்களை சென்னைக்கு எடுத்துவந்தது. அந்த கார்களின் அணிவகுப்பு இன்று காலை சென்னை ஈ.சி.ஆரில் நடந்தது முடிந்தது. அதன்பிறகு அதில் ஆறு சொகுசு கார்கள், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் சீறிப் பாய்ந்தன. இதனைக் கண்ட காமராஜர் சாலையில் போக்குவரத்து கண்காணிப்பில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தி பிறகு அனைத்து கார்களுக்கும் அபராதம் விதித்தனர். 

 

பிடிப்பட்ட கார்களை காவல்துறையினர் காமராஜர் சாலையில் வரிசையாக நிறுத்தி வைத்தனர். இதனைக் கண்டு அங்கிருந்த மக்கள் அந்த விலை உயர்ந்த சொகுசு கார்கள் அருகே நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.