ADVERTISEMENT

தந்தையைக் கொன்ற மகன்! ஆம்புலன்ஸ் டிரைவரால் வெளிவந்த உண்மை!  

11:56 AM Oct 19, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் அனைக்குப்பம் மீனாட்சி நகர் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணியன். சார் ஆட்சியராக பணிபுரிந்த இவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார். இவருடைய மனைவி தபால் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்த நேரத்தில், 15 ஆண்டுகளுக்கு முன் கேன்சரால் உயிரிழந்துவிட்டார். சுப்பிரமணியினுக்கு மகன், மகள் மற்றும் இரட்டை மகன்கள் உள்ளனர். இவர்களில் 2 மகன், ஒரு மகள் என 3 பேருக்குத் திருமணமாகி வெளியூர் சென்றுவிட்ட நிலையில், இரட்டை மகன்களில் ஒருவரான கார்த்தி மட்டும் சுப்பிரமணியனுடன் வீட்டில் இருந்துள்ளார். 32 வயதான பொறியியல் பட்டதாரியான இவர் எம்.பி.ஏ முடித்துள்ளார். மதுவுக்கு அடிமையான இவர், தினந்தோறும் மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் எங்கும் வேலைக்குச் செல்லாத இவர், தந்தையின் வருமானத்தை நம்பியே வாழ்ந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (18.10.2021) காலை இவரது வீட்டில் தந்தை சுப்பிரமணியன் எழுப்பிய சப்தத்தை அக்கம் பக்கத்தினர் கேட்டுள்ளனர். அதன்பிறகு எந்த ஒரு சத்தமும் இல்லாத நிலையில், பிற்பகல் 3 மணி அளவில் கார்த்தி அரசு மருத்துவமனை அருகில் சென்று அங்குள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் தனது தந்தை இறந்துவிட்டதாகவும், உடலை வைப்பதற்கு ஃப்ரீசர் பாக்ஸ் வேண்டும் எனவும் கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஃப்ரீசர் பாக்ஸை ஆம்புலன்ஸில் வைத்து கார்த்தியை பின்தொடர்ந்து வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு போய் ஃப்ரீசர் பாக்ஸ் வைக்கும் நேரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வீட்டில் சோதனை செய்தபோது, கொடூரமான முறையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு, கைகள் உடைக்கப்பட்டு, கண்ணாடியால் கிழிக்கப்பட்டு சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். அதன் பிறகு கார்த்தி வசித்த அறைக்குச் சென்று பார்த்தபோது போலீசார் அதிர்ச்சியடைந்தனர். காரணம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி மது பாட்டில்களை அடுக்கி வைத்து அதன் நடுவில் படுக்கையைப் போட்டு கார்த்தி படுத்திருந்தார். மேலும், நூற்றுக்கணக்கான காலி சிகரெட் பாக்கெட்டுகளும் அங்கே கிடந்துள்ளன.

பல மாதங்களாக அவர் கடையிலிருந்து வாங்கிவந்து சாப்பிட்ட உணவு பொட்டலங்களைக் கூட வீட்டை விட்டு வெளியில் போடாமல் அங்கேயே வைத்துள்ளதைக் கண்டுபிடித்தனர். அதன்பிறகு கார்த்தியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த போலீசார், அவரை வீட்டிலிருந்து கைது செய்து அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் உயிரிழந்த சுப்பிரமணியன் உடலும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தாய் இறந்தது முதல் வேலைக்குச் செல்லாமல் மதுவுக்கு அடிமையான கார்த்தி, தினமும் தந்தையிடம் குடிப்பதற்குப் பணம் கேட்டு தகராறு செய்துவந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்த நிலையில், நேற்றும் மதுவுக்குப் பணம் கேட்டு அதைக் கொடுக்க மறுத்த தந்தையைக் கார்த்திக் கொலை செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

மன நோயாளியான பொறியியல் பட்டதாரி மகன், தந்தையைக் கொலை செய்த சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT