Skip to main content

தந்தையைக் கொன்ற மகன்! ஆம்புலன்ஸ் டிரைவரால் வெளிவந்த உண்மை!  

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

Mentally ill son addicted to alcohol who killed his father!

 

கடலூர் அனைக்குப்பம் மீனாட்சி நகர் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணியன். சார் ஆட்சியராக பணிபுரிந்த இவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார். இவருடைய மனைவி தபால் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்த நேரத்தில், 15 ஆண்டுகளுக்கு முன் கேன்சரால் உயிரிழந்துவிட்டார். சுப்பிரமணியினுக்கு மகன், மகள் மற்றும் இரட்டை மகன்கள் உள்ளனர். இவர்களில் 2 மகன், ஒரு மகள் என 3 பேருக்குத் திருமணமாகி வெளியூர் சென்றுவிட்ட நிலையில், இரட்டை மகன்களில் ஒருவரான கார்த்தி மட்டும் சுப்பிரமணியனுடன் வீட்டில் இருந்துள்ளார். 32 வயதான பொறியியல் பட்டதாரியான இவர் எம்.பி.ஏ  முடித்துள்ளார். மதுவுக்கு அடிமையான இவர், தினந்தோறும் மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் எங்கும் வேலைக்குச் செல்லாத இவர், தந்தையின் வருமானத்தை நம்பியே வாழ்ந்துள்ளார். 

 

இந்த நிலையில், நேற்று (18.10.2021) காலை இவரது வீட்டில் தந்தை சுப்பிரமணியன் எழுப்பிய சப்தத்தை அக்கம் பக்கத்தினர் கேட்டுள்ளனர். அதன்பிறகு எந்த ஒரு சத்தமும் இல்லாத நிலையில், பிற்பகல் 3 மணி அளவில் கார்த்தி அரசு மருத்துவமனை அருகில் சென்று அங்குள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் தனது தந்தை இறந்துவிட்டதாகவும், உடலை வைப்பதற்கு ஃப்ரீசர் பாக்ஸ் வேண்டும் எனவும் கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஃப்ரீசர் பாக்ஸை ஆம்புலன்ஸில் வைத்து கார்த்தியை பின்தொடர்ந்து வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு போய் ஃப்ரீசர் பாக்ஸ் வைக்கும் நேரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வீட்டில் சோதனை செய்தபோது, கொடூரமான முறையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு, கைகள் உடைக்கப்பட்டு, கண்ணாடியால் கிழிக்கப்பட்டு சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். அதன் பிறகு கார்த்தி வசித்த அறைக்குச் சென்று பார்த்தபோது போலீசார் அதிர்ச்சியடைந்தனர். காரணம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி மது பாட்டில்களை அடுக்கி வைத்து அதன் நடுவில் படுக்கையைப் போட்டு கார்த்தி படுத்திருந்தார். மேலும், நூற்றுக்கணக்கான காலி சிகரெட் பாக்கெட்டுகளும் அங்கே கிடந்துள்ளன. 

 

Mentally ill son addicted to alcohol

 

பல மாதங்களாக அவர் கடையிலிருந்து வாங்கிவந்து சாப்பிட்ட உணவு பொட்டலங்களைக் கூட வீட்டை விட்டு வெளியில் போடாமல் அங்கேயே வைத்துள்ளதைக் கண்டுபிடித்தனர். அதன்பிறகு கார்த்தியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த போலீசார், அவரை வீட்டிலிருந்து கைது செய்து அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் உயிரிழந்த சுப்பிரமணியன் உடலும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  

 

Mentally ill son addicted to alcohol

 

தாய் இறந்தது முதல் வேலைக்குச் செல்லாமல் மதுவுக்கு அடிமையான கார்த்தி, தினமும் தந்தையிடம் குடிப்பதற்குப் பணம் கேட்டு தகராறு செய்துவந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்த நிலையில், நேற்றும் மதுவுக்குப் பணம் கேட்டு அதைக் கொடுக்க மறுத்த தந்தையைக் கார்த்திக் கொலை செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். 

 

மன நோயாளியான பொறியியல் பட்டதாரி மகன், தந்தையைக் கொலை செய்த சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.