திண்டுக்கல் ஊராட்சிமன்ற கூட்டம் தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் துவங்கியவுடன் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. தமிழக அரசு திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.1 கோடியே 21 லட்சத்து 87 ஆயிரம் தொகையை பொது நிதிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தை எடுத்து திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் சாலைகள் அமைக்கும் பணிக்காக ஊராட்சி மன்றம் அனுமதி இல்லாமல் மாவட்ட நிர்வாகம் தன்னிச்சையாக செயல்பட்டு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்த விவரங்கள் கூட்டம் நடைபெறும் தீர்மானத்தில் கொண்டு வரப்படவில்லை. இதனை மறைத்து செயல்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் மன்ற தலைவர் ராஜா தலைமையில் தி.மு.க, ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். பின்பு ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மன்ற அஜந்தா நகலை கிழித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இது சம்பந்தமாக ஊராட்சிமன்ற தலைவர் ராஜா பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, “மன்ற அனுமதி இல்லாமல் மாவட்ட நிர்வாகம் தன்னிச்சையாக செயல்பட்டு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தலைவர், உறுப்பினர்கள் என நாங்கள் இருக்கும்போது எங்களது அனுமதி இல்லாமல் பணிகள் செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது இப்பிரச்சனைக்கு முடிவு தெரியாமல் அடுத்த கூட்டம் நடைபெறாது” என தெரிவித்தார்.