Skip to main content

"யாரிடம் சொல்வது உண்மை? மத்திய அரசின் நிலைபாடு என்ன?" - மத்திய அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி! 

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

 

mekedathu dam construction makkal needhi maiam kamal haasan statement

 

காவிரி விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று (14/07/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடந்தாய் வாழி காவேரி" என்று பாடும் நம்மை "நின்றாய் நீ காவேரி" என்று வாடும் நிலைக்குத் தள்ளுகிறது கர்நாடக அரசு. 

 

காவிரி நதிநீர் பங்கீட்டிற்காக 1890-ல் அன்றைய மைசூர் மாகாணத்திற்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையே பேசசுவார்த்தை; 1892-ல் ஒப்பந்தம்; மீண்டும் 1924-ல் ஒப்பந்தம்; 50 ஆண்டுகள் கழித்து 1974-ல் ஒப்பந்தம் புதுப்பித்தலில் சிக்கல்; 1991-ல் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு; 2007-ல் இறுதித் தீர்ப்பு; 2013-ல் இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியீடு; 2018-ல் காவிரி மேலாண்மை வாரியம் என 130 ஆண்டுகளாக காவிரி விவகாரம் என்பது இரு மாநிலங்களுக்கிடையே தீராத பிரச்சனையாக, உறவுகளைச் சீர்குலைக்கும் சிக்கலாகி நீடிக்கிறது. 

 

தடையேதுமின்றி ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நதியில் ஏற்கனவே பல அணைகளைக் கர்நாடக அரசு கட்டிவிட்டது. மேலும், ஒரு அணையைக் கட்டி தமிழக விவசாயிகளின் வாழ்வை கேள்விக்குறியாக்க நினைக்கும் கர்நாடக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

 

இரு மாநிலங்களும் தங்களுக்குள் தீர்த்துக் கொள்ள முடியாமல் போகும் நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைகளை உரிய வழிமுறைகளின் மூலம் தீர்த்து வைக்க வேண்டிய தார்மீக பொறுப்பு, அரசியல் சாசனப் பொறுப்பு மத்திய அரசிற்கு இருக்கிறது. ஆனால் துரதிஷ்ட வசமாக மத்திய அரசு அதை உணரவில்லை என்பதே வரலாறு. 

 

தமிழகத்தின் சார்பாக நமது நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சரைச் சந்திக்கும் போது, அவரிடம் உங்கள் விருப்பமில்லாமல் மேகதாது அணைக்கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்திருந்தார். 

 

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஜலசக்தித்துறை அமைச்சரைச் சந்தித்த போது வெகு விரைவில் உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிக்கிறேன் என்று உறுதியளித்திருக்கிறார். இந்த இரண்டு செய்திகளும் சம்பந்தப்பட்டவர்களால் பத்திரிகையாளர்களிடம் பகிரப்பட்டுள்ளது. அப்படியெனில் ஜலசக்தித்துறை யாரிடம் சொல்வது உண்மை? மத்திய அரசின் நிலைபாடு என்ன? அது நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி செயல்படுமா அல்லது ஓட்டு அரசியலுக்கு எது உகந்ததோ அதை செய்யுமா? 

 

தமிழக பிரதிநிதி சந்திக்கும் போது தமிழக குரலிலும், கர்நாடக மாநிலத்தின் பிரதிநிதி சந்திக்கும் போது கர்நாடகக் குரலிலும் பேசுவது தேசத்தின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல். இது அரசியல் சாசனத்தின் மாண்பைக் குலைக்கிறது. 

 

அரசியல் காரணங்களுக்காக காவிரி பிரச்சனையில் கர்நாடகத்தின் பக்கமாகவே மத்திய அரசு சாய்ந்திருப்பது வழமை. இந்த அநீதிப் போக்கு இனியும் தொடர்வது நியாயமல்ல. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் குரல் தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும். நீதியின் குரலாக ஒலிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.