Skip to main content

சிதம்பரத்தில் செயற்கை பேரழிவிற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு கருத்தரங்கு

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயற்கை பேரழிவிற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு கருத்தரங்கு திங்கள்கிழமை நடந்தது.

 

meeting about hydro carbon plan in delta

 

செயற்கை பேரழிவிற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு  தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமை தாங்கினார். கார்மாங்குடி வெங்கடேசன், குறிஞ்சிப்பாடி ராமலிங்கம், காட்டுமன்னார்கோவில் சங்கர், வாண்டையார் இருப்பு செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயற்கை பேரழிவிற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு  இணை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு அறிமுக உரையாற்றினார். மருத்துவர் ஜெயராஜமூர்த்தி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசகர் மருத்துவர் பாரதிசெல்வன், சென்னை கடற்கரை வளமைய சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக பேசினர்.
 

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் பேசுகையில், "இத்திட்டத்தில் பூமியை துளையிட்டு 90 சதவீதம் தண்ணீர் 10 சதவீதம் எண்ணெய் எடுக்கிறார்கள். இதை தொடர்ந்து எடுத்தால் பூமிக்குள் வெற்றிடம் ஏற்படும். பல அடுக்கு பாறைகளை  நொறுக்கியும், வெடி வைத்தும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் மேல உள்ள தண்ணீர் அந்த வெற்றிடத்தை நிரப்பும் இதனால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்படும். நிலம் உள் வாங்கும். இந்த திட்டத்தினால் வண்டல் மண் உள்ள சமவெளி பகுதியான காவிரி டெல்டா பகுதி முழுவதும்  விவசாயம்  பாதிக்கப்படும். கடல் மட்டத்தை விட நில மட்டம் தாழ்ந்து கடல் உள்ளே புகுந்துவிடும். இத்திட்டத்தினால் பல ஊர்கள் கடலுக்குள் இருக்கும். மேலும் மக்களுக்கு பல நோய்கள் ஏற்படும். பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும். எல்லோரும் கை கோர்த்து டெல்டா பகுதியை பாதுகாக்க வேண்டும். இந்த திட்டத்தை எதிர்த்து நாம் போராடவில்லை என்றால் தலைமுறை குற்றவாளியாவோம். இதனால் காவிரி படுகை பாலைவனமாகும். கடல் வாழ் உயிரினங்கள் அழியும், தமிழகத்தில் இத்திட்டத்தினால் 70 லட்சம் பேர் அகதிகள் ஆக்கப்படுவார்கள். எனவே இந்த திட்டத்தை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும்" என்றார்.

இக்கூட்டத்தில் திடீரென கலந்து கொண்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி பேசுகையில், "இத்திட்டத்தினால் டெல்டா பகுதி பாலைவனமாக மாறும். இதை எதிர்த்து அரசியல் கட்சிகள்  அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இந்த சக்தி சிதறிவிடக்கூடாது. இந்த தேர்தலில்  மோடிக்கு எதிரான வாக்கு வங்கிகளை  ஒருங்கிணைத்து செயல்படுத்தியிருந்தால் மோடி ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. இந்த திட்டத்தை எதிர்க்க  அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்றார்.

இதில் விவசாயிகள், விவசாயிகள் சங்க தலைவர்கள், அரசியல் கட்சியினர்  பலர் கலந்து கொண்டனர்.  பேரழிவிற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு  ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன் நன்றி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.