Skip to main content

சிதம்பரத்தில் செயற்கை பேரழிவிற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு கருத்தரங்கு

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயற்கை பேரழிவிற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு கருத்தரங்கு திங்கள்கிழமை நடந்தது.

 

meeting about hydro carbon plan in delta

 

செயற்கை பேரழிவிற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு  தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமை தாங்கினார். கார்மாங்குடி வெங்கடேசன், குறிஞ்சிப்பாடி ராமலிங்கம், காட்டுமன்னார்கோவில் சங்கர், வாண்டையார் இருப்பு செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயற்கை பேரழிவிற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு  இணை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு அறிமுக உரையாற்றினார். மருத்துவர் ஜெயராஜமூர்த்தி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசகர் மருத்துவர் பாரதிசெல்வன், சென்னை கடற்கரை வளமைய சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக பேசினர்.
 

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் பேசுகையில், "இத்திட்டத்தில் பூமியை துளையிட்டு 90 சதவீதம் தண்ணீர் 10 சதவீதம் எண்ணெய் எடுக்கிறார்கள். இதை தொடர்ந்து எடுத்தால் பூமிக்குள் வெற்றிடம் ஏற்படும். பல அடுக்கு பாறைகளை  நொறுக்கியும், வெடி வைத்தும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் மேல உள்ள தண்ணீர் அந்த வெற்றிடத்தை நிரப்பும் இதனால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்படும். நிலம் உள் வாங்கும். இந்த திட்டத்தினால் வண்டல் மண் உள்ள சமவெளி பகுதியான காவிரி டெல்டா பகுதி முழுவதும்  விவசாயம்  பாதிக்கப்படும். கடல் மட்டத்தை விட நில மட்டம் தாழ்ந்து கடல் உள்ளே புகுந்துவிடும். இத்திட்டத்தினால் பல ஊர்கள் கடலுக்குள் இருக்கும். மேலும் மக்களுக்கு பல நோய்கள் ஏற்படும். பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும். எல்லோரும் கை கோர்த்து டெல்டா பகுதியை பாதுகாக்க வேண்டும். இந்த திட்டத்தை எதிர்த்து நாம் போராடவில்லை என்றால் தலைமுறை குற்றவாளியாவோம். இதனால் காவிரி படுகை பாலைவனமாகும். கடல் வாழ் உயிரினங்கள் அழியும், தமிழகத்தில் இத்திட்டத்தினால் 70 லட்சம் பேர் அகதிகள் ஆக்கப்படுவார்கள். எனவே இந்த திட்டத்தை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும்" என்றார்.

இக்கூட்டத்தில் திடீரென கலந்து கொண்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி பேசுகையில், "இத்திட்டத்தினால் டெல்டா பகுதி பாலைவனமாக மாறும். இதை எதிர்த்து அரசியல் கட்சிகள்  அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இந்த சக்தி சிதறிவிடக்கூடாது. இந்த தேர்தலில்  மோடிக்கு எதிரான வாக்கு வங்கிகளை  ஒருங்கிணைத்து செயல்படுத்தியிருந்தால் மோடி ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. இந்த திட்டத்தை எதிர்க்க  அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்றார்.

இதில் விவசாயிகள், விவசாயிகள் சங்க தலைவர்கள், அரசியல் கட்சியினர்  பலர் கலந்து கொண்டனர்.  பேரழிவிற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு  ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன் நன்றி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தல் ஆணையத்தில் குளறுபடி'- சந்தேகம் எழுப்பிய திருமாவளவன்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
'Confusion in the Election Commission'- Thirumavalavan's suspicions

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தேர்தல் வாக்குப்பதிவு தேதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடக்கவிருக்கும் தேதிக்கும் 45 நாட்கள் இடைவெளி இருப்பது தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தமுறை தேர்தல் ஆணையத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. தேர்தல் ஆணையர் பதவிவிலகி அதற்கான இடங்கள் காலியாக இருந்ததன் காரணமாக ஒரு வாரம் கால தாமதமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவுகளோடு ஒப்புக்கு சீட்டுகளையும் 100% இணைத்து ஒப்பீடு செய்து முடிவு வெளியிட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Next Story

“மத்திய அரசு சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தியதன் நோக்கம் இதுதான்” - திருமாவளவன்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Thirumavalavan announced the protest for CAA Act

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சி.ஏ.ஏ சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதனையொட்டி, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், “இந்த சட்டத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அந்த எதிர்ப்பை எதிர்கொள்ள இயலாத காரணத்தில் கடந்த 3 ஆண்டுகளாக் அச்சட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்போது அதை அமல்படுத்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சென்றதேயில்லை. மணிப்பூரில் நாள்தோறும் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அங்கு சென்று பார்க்கவேயில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் ஒரே மாநிலத்தில் திரும்ப திரும்ப வருகிற நிலையை நாம் பார்க்கிறோம். அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் நலனை விட தங்கள் அரசியல் ஆதாயம் தான் முக்கியம் என்று கருதக்கூடியவர்கள். அதனால், இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பது அவசியம். சனாதன சக்திக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார்.