Skip to main content

பள்ளியில் முதலிடம் பிடித்தும் மருத்துவப் படிப்புக்குப் பணமில்லை! - கலங்கும் அரசுப் பள்ளி மாணவி!

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

Medical Study Question Due to Family Poverty


தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகில் உள்ள ஓமவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, விவசாயக் கூலி வேலைசெய்து வருகிறார். இவரது வருமானம் குடும்பச் செலவுகளுக்கே பற்றாக்குறையாக உள்ளது. கஜா புயலில் சேதமடைந்த வீட்டைக் கூட சீரமைக்க முடியாமல் தார்ப்பாய் போட்டு போர்த்தி வைத்திருக்கிறார். குடும்ப வறுமையை நினைத்து வறுமையைப் போக்க, தான் நன்றாகப் படிக்க வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்ட அவரது மகள் அபிநயா, கொன்றைக்காடு அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பில் 344 மதிப்பெண் பெற்று, குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் +1, +2 படித்து 503 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம் பெற்றார். 

 

நல்ல மதிப்பெண் எடுத்திருப்பதால் உனக்குக் கால்நடை மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று ஆசிரியர்களும் நண்பர்களும் சொல்ல, அவர் விண்ணப்பித்தார். சில நாட்களுக்கு முன்பு கலந்தாய்வுக்கு அழைப்பு வந்தது. கலந்தாய்வுக்குச் செல்ல பணம் இல்லை. பக்கத்தில் உள்ளவர்களிடம் வட்டிக்கு ரூ.2 ஆயிரம் கடன் வாங்கிக் கொண்டு கலந்தாய்வுக்குச் சென்றவருக்கு சென்னை வேப்பேரி கால்நடைக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஜனவரி 13ஆம் தேதிக்குள் கல்லூரியில் ரூ.20 ஆயிரம் செலுத்தி சேர்க்கை செய்துகொள்ள உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சேர்க்கைக் கட்டணம் செலுத்த வசதியின்றி இன்னும் சேர்க்கைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மாணவி, தனது படிப்பு கேள்விக்குறியாகிவிடுமோ என்ற கவலையில் உள்ளார்.


இது குறித்து மாணவி அபிநயா நம்மிடம், “குடும்ப வறுமையை நினைத்துப் படித்தேன். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கி இப்போ கால்நடை மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் அட்மிஷன்கூட போடாமல் இருக்கிறேன். கலந்தாய்வுக்கு கூட வட்டிக்குப் பணம் வாங்கிட்டுப் போனோம். இப்போ ரூ.20 ஆயிரம் கட்டி அட்மிஷன் போடனும். அதுக்கு என்னிடம் பணம் இல்லை. அடுத்து மெஸ் பில், புத்தகம் வாங்க என்று பல ஆயிரங்கள் தேவைப்படும். ஆனால், எங்களிடம் பணம் பெரிய தடையாக உள்ளதால், இடம் கிடைத்தும் படிப்பைத் தொடர முடியாமல் போகுமோ என்று அச்சப்படுகிறேன். அரசுப் பள்ளியில் படித்து இவ்வளவு தூரம் வந்த பிறகு பணத்தால் படிப்பு போய்விடுமோ" என்று கண்கலங்கினார்.


ஏழை மாணவர்களின் படிப்பிற்காக உதவ எத்தனையோ நல்ல உள்ளங்கள் காத்திருக்கிறார்கள். அப்படியான நல்ல உள்ளங்கள் மாணவி அபிநயாவின் கல்விக்கு உதவினால், அவரது கனவு நினைவாகும். இல்லை என்றால், ஏழை மாணவியின் கனவு கனவாகவே போகும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரற்ற சடலங்களுக்கு இவ்வளவு மதிப்பா? மாற்றி யோசித்த கேரள அரசு!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kerala earned revenue by selling corpses

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மாறி மாறித் தாக்கிக் கொண்ட அரசு மருத்துவரும் பெண் நோயாளியும்; வேலூரில் பரபரப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Government doctor and female patient who took turns beating in Vellore

வேலூர் அடுத்த சாத்துமதுரை பகுதியைச் சேர்ந்தவர் சுபா(36) இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏழு நாட்களாக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் இவரைக் காண ஆண் உறவினர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு ரவுண்ட்ஸ் வந்த முதுகலை மருத்துவம் பயிலும் மருத்துவர் விஷால் என்பவர் சுபாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையில் அமர்ந்திருந்த ஆண் நபரிடம், இது பெண்களுக்கான வார்டு ஆண்கள் உள்ளே வரக்கூடாது என வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

நான் யார் தெரியுமா, வெளியில எல்லாம் போக முடியாது... நீ போ என ஒருமையில் மருத்துவரிடம் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் முற்றியுள்ளது. திடீரென ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது நோயாளி சுபாவும் மருத்துவரை தாக்கியுள்ளார். அதோடு தான் அணிந்திருந்த காலணியால் மருத்துவரை தாக்கியுள்ளார். இது நோயாளிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கிருந்து பெண் செவிலியர்கள் தடுக்க முடியாமல், ‘ஐயோ காப்பாத்துங்க காப்பாத்துங்க...’ என கத்தினர். அதன்பின் அருகில் இருந்த நோயாளியை பார்க்க வந்தவர்கள் இரு தரப்பையும் விலக்கி விட்டுள்ளனர்.

மருத்துவர்கள் தரப்பிலிருந்து காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு கூறியதும், மருத்துவமனைக்கு வந்த வேலூர் தாலுகா காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட முதுகலை மருத்துவ மாணவர் விஷால் அளித்த புகாரின் அடிப்படையில் பணியில் உள்ள மருத்துவரை தாக்குவதை தடுக்கும் சட்டத்தின் கீழ், பணி செய்ய விடாமல் தடுக்கும் சட்டம், தாக்குதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் மருத்துவரை தாக்கிய பெண் நோயாளி சுபா மற்றும் அவரது உறவினர் திவாகர் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நோயாளி சுபா கூறுகையில், நான் கடந்த ஏழு நாட்களாக இங்கு சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு மன அழுத்தமும் உள்ளது. இந்நிலையில் என்னை காண வந்த உறவினரை வார்டுக்கு வந்த மருத்துவர் ஒருமையிலும், அவதூறாகவும் பேசினார். இதை நான் கேட்டதற்கு என்னையும், என் தாயாரையும் தகாத வார்த்தைகளால் அவதூறாக திட்டினார். பின்னர் மருத்துவர் தான் எங்களை முதலில் அறைந்தார். அதன் காரணமாகவே மருத்துவரை தாக்கியதாக தெரிவித்தார். 

இதுகுறித்து வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாப்பாத்தியிடம் கேட்டபோது, “பெண்கள் வார்டில் ஆண்கள் நுழையக்கூடாது. ஆனால் அந்த நபர் படுக்கையில் படுத்துள்ளார். இதை கேட்டதற்கு மருத்துவரை தாக்கியுள்ளார்கள். செவிலியர்கள் விலக்கிய போதும் செருப்பால் பெண் நோயாளி மருத்துவரை தாக்கியுள்ளார். புகார் அளித்துள்ளோம், காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அவர்கள் கூறியதில் உண்மைத்தன்மை இல்லை” எனக் கூறினார்.

அரசு மருத்துவமனையில் நோயாளி, மருத்துவர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.