மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள்இட ஒதுக்கீட்டில் மருத்துவ சீட் கிடைத்தாலும், ஐந்து வருடம் படிப்புக்கு ஏற்படும் செலவை எத்தனை ஏழை மாணவர்களின் குடும்பங்களால் சமாளிக்க முடியும்? அப்படி ஒரு மாணவியின் குடும்ப நிலையை அறிந்த ஒரு அமைப்பு, ஐந்து வருட கல்வி செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே ரெட்டிபாளையம் ஊராட்சியில், கரைப்பாளையம் புது காலனி பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல். இவர் விவசாயக் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் என நான்கு வாரிசுகள் உள்ளனர்.
இவர் கூலிவேலை செய்து, தனது குழந்தைகள் அனைவரையும், அரசுப் பள்ளியில் தான் படிக்க வைத்துவருகிறார். இப்போது, இவரது இரண்டாவது மகள் காவ்யா என்பவர் ஊத்துக்குளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வு எழுதினார்.
தற்போது, 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் படி, கம்யூனிட்டி ரேங்க் அடிப்படையில், மாணவி காவ்யா தமிழக அளவில் 8 -ஆவது ரேங்க் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவருக்குக் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் படிக்க, இடம் கிடைத்துள்ளது. ஆனால், அதற்கு உண்டான கல்வி செலவுத் தொகையைக் கட்ட முடியாமல், பெரும் வேதனையில் இருந்தது அந்தக் குடும்பம்.
இந்தத் தகவலை அறிந்து, பெருந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் 'மூங்கில் காற்று' என்ற அறக்கட்டளை, இந்த மருத்துவக் கல்லூரி மாணவிக்கு, ஐந்து ஆண்டுக்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது. இதன் நிறுவனத் தலைவராகப் பெருந்துறை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், ஜெயக்குமார் என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில், 19 -ஆம் தேதி, ஜெயக்குமாரும் அவரது மனைவி சண்முகப்பிரியாவும், இந்த மருத்துவக் கல்லூரி மாணவியின் முதற்கட்ட படிப்பு செலவுத் தொகையை அவரது குடும்பத்தினரிடம் நேரில் ஒப்படைத்தார்.
மேலும், கல்லூரி நிர்வாகம் அளிக்கும் பட்டியல் செலவுத் தொகையை, முழுமையாக அறக்கட்டளை மூலம் செலுத்துவதாகவும் உறுதியளித்தார். இப்படி, ஏழை மாணவக் குடும்பத்திற்கு நம்பிக்கையூட்டும் நல்ல செயல்களை யார் செய்தாலும் பாராட்டலாம்.