
சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் பிரசாந்த் என்பவர் மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாகக் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடந்த விசாரணையில் பிரதீப் என்பவர் உள்ளிட்ட சிலரிடம் இவர் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. பிரதீப், போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகிறது. இதனிடையே அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாந்த், தமிழ்த் திரைப்பட நடிகர்களுக்குப் போதைப் பொருள் சப்ளை செய்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில் இவரிடம் ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கியதாகவும் பிரசாந்தின் செல்போனை ஆய்வு செய்ததில் அதில் ஸ்ரீகாந்த் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஸ்ரீ காந்திடம் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் நீண்ட விசாரணை நடத்தினர். அதன் பின்பு அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, போதைப்பொருள் பயன்படுத்தியதை உறுதி செய்தனர். இத்தகைய சூழலில் தான் ஸ்ரீகாந்த் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பிரதீப் என்ற நபரிடம் இருந்து போதைப்பொருளைக் கிராம் ஒன்றிற்குக் கிட்டத்தட்ட ரூ.12 ஆயிரம் என 40 முறைக்கு மேலாக அதை அவர் உபயோகப்படுத்தியுள்ளார். இதற்காக ஆன்லைன் மூலமாகக் கிட்டத்தட்ட ரூ.4 லட்சத்து 72 ஆயிரம் வரை பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. இவை அனைத்தும் உறுதிசெய்யப்பட்ட பிறகே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் வேறொரு நடிகருக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அது தொடர்பாகவும் காவல் துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். ஸ்ரீ காந்த் கைது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்தை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக கீழ்பாக்கம் அரசு பொதுமருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர், அங்கு அவருக்கு முழு உடல்பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன் பிறகு எழும்பூரில் உள்ள நீதிமன்ற குடியிருப்பில் உள்ள நீதிபதி முன்பாக அஜர்படுத்தப்பட உள்ளார். இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.