Skip to main content

தமிழகத்தில் 20 பேருக்கு சிறந்த மருத்துவர் விருது; 50 ஆயிரம் ரூபாய் வெகுமதியும் உண்டு!

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

 

தமிழகத்தில் மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் அரசு மருத்துவர்கள் 17 பேருக்கும், தனியார் மருத்துவர்கள் 3 பேருக்கும் என மொத்தம் இருபது மருத்துவர்களுக்கு சிறந்த மருத்துவர் விருது வழங்கப்படுகிறது. இவர்களுக்கு, இன்று (ஆகஸ்ட் 22, 2019) மாலை சென்னையில் நடைபெறும் விழாவில் விருதுடன் 50 ஆயிரம் வெகுமதியும் வழங்கப்பட உள்ளது.

 

d


அரசு மற்றும் தனியாரில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்களை தேர்வு செய்து, தமிழக அரசு ஆண்டுதோறும் சிறந்த மருத்துவர் விருது, வெகுமதி வழங்கி கவுரவித்து வருகிறது. மருத்துவர்களின் சேவைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


கடந்த 2018ம் ஆண்டிற்கான சிறந்த மருத்துவர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டது. மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் பணியாற்றி வரும் திருவள்ளூர் பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அனு ரத்னா, உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாரதி, சேலம் ஆத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நீலா கண்ணன், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் ஆனந்தகுமார், உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் அருணாகுமாரி ஆகியோர் சிறந்த மருத்துவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


மருத்துவக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றி வரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் திருநாவுக்கரசு, சென்னை தமிழ்நாடு அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மருத்துவர் சந்திரமவுலீஸ்வரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ரேடியோ டயாக்னசிஸ் துறை பேராசிரியர் தேவிமீனாள், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் ஆகியோர் சிறந்த மருத்துவர் விருதைப் பெறுகின்றனர்.


பொதுமருத்துவம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்ககத்தின் கீழ் பணியாற்றி வரும் திருவண்ணாமலை மாவட்ட தொற்றுநோய் தடுப்புப்பிரிவு மருத்துவர் மேஜர் சிவஞானம், விழுப்புரம் மாவட்ட தொற்றுநோய் தடுப்புப்பிரிவு மருத்துவர் பாலசுப்ரமணியன், சென்னை மக்கள் நல்வாழ்வு மற்றும் நோய்த்தடுப்புத்துறை மருத்துவர் விடுதலை விரும்பி, திருப்பத்தூர் நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பசுபதி, திருப்பூர் குடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கீதாராணி ஆகியோரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 


மேலும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில் பணியாற்றி வரும் தேனி சிலமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுஷ் மருத்துவர் முத்தமிழ்செல்விக்கும் விருது வழங்கப்படுகிறது. 


இவர்கள் தவிர, தனியார் துறையில் பணியாற்றி வரும் குரோம்பேட்டை டாக்டர் ரேலா மருத்துவமனை மருத்துவர் பிரபாகரன், கோவை விஜிஎம் மருத்துவமனை மோகன் பிரசாத், சென்னை அப்பல்லோ முதன்மை மருத்துவமனை செங்கோட்டுவேலு, திருச்சி ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் சென்னியப்பன் ஆகிய நான்கு பேரும் சிறந்த மருத்துவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


இவர்கள் அனைவருக்கும், சென்னையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22, 2019) மாலை, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலையில் நடைபெறும் விழாவில் தங்கமுலாம் பூசப்பட்ட வெண்கல பதக்கத்துடன் கூடிய சிறந்த மருத்துவர் விருது, பாராட்டுச்சான்றிழ் ஆகியவற்றுடன் ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வெகுமதியும் வழங்கப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விருதுகளை வழங்குகிறார்.


மருத்துவர் தனபால்:


சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பாளராக உள்ள தனபால் (55), கடந்த 1990ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி மருத்துவத்துறையில் பணியில் சேர்ந்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் கிராமம்தான் இவருடைய சொந்த ஊர். 30 ஆண்டுகளாக மருத்துவத்துறையில் பணியாற்றி வருகிறார். 


எம்எஸ் பொது அறுவை மருத்துவரான இவர், பொதுசுகாதாரத்துறை மற்றும் மருத்துவப்பணிகள் துறைகளின் கீழ் கிராமப்புற மக்களுக்கு 15 ஆண்டுகள் சேவையாற்றி உள்ளார். அதையடுத்து, கடந்த 12 ஆண்டுகளாக மருத்துவக்கல்வி இயக்ககத்தின் கீழ் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.


இதற்கிடையே, இணை பேராசிரியராக பதவி உயர்வு பெற்று, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஓராண்டு பணியாற்றி வந்தார். எஸ்ஐசியு, தீக்காய வார்டு, செப்டிக் அறுவை அரங்கு, அவசர அறுவை அரங்கு, செமினார் அரங்கு உள்ளிட்ட பிரிவுகள் தொடங்க பெரும் பங்காற்றினார். ஏற்கனவே சேலம் மாவட்ட அளவில் சிறந்த மருத்துவர் விருது பெற்றுள்ளார். அவருக்கு தமிழக அரசின் சிறந்த மருத்துவர் விருது கிடைத்துள்ளதற்கு சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருமால்பாபு, சக மருத்துவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மம்தா பானர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Doctor explains Mamata Banerjee's health

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டது.

Doctor explains Mamata Banerjee's health

அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டிருந்தது. மம்தா பானர்ஜி கொல்கத்தா வூட்பர்ன் பிளாக்கில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

Doctor explains Mamata Banerjee's health!

இந்நிலையில் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான மணிமோய் பந்தோபாத்யாய் கூறும்போது, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (14.03.2024) இரவு 07:30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் இருந்து ஏற்பட்ட அதிர்வு காரணமாக வீட்டில் அவர் விழுந்த தடயம் உள்ளது. இதனால் அவரது பெருமூளை அதிர்ச்சி ஏற்பட்டு நெற்றியிலும் மூக்கிலும் கூர்மையான வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆரம்பத்தில் முதலில் மூளை மற்றும் நரம்பியல், மருந்தவியல் மற்றும் இதயவியல் ஆகிய துறையின் தலைமை மருத்துவர்கள் குழுவினரை கொண்டு, உடல் நிலை குறித்து பரிசோதித்து உறுதிபடுத்தப்பட்டது.

Doctor explains Mamata Banerjee's health!
மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய்

நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டன. ஈ.சி.ஜி., சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மம்தா பானர்ஜி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் வீட்டிற்கு செல்ல விரும்பினார். இதனால் அவரை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் மருத்துவர் குழுவின் ஆலோசனையின்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். அவருக்கு நாளை (15.03.2024) மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மருத்துவ சீட்டு தராத கவுன்சில்; சாதனை படைத்த உலகில் உயரம் குறைவான மருத்துவர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
The world's shortest man holds the record to become doctor

3 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட 23 வயது இளைஞர், பல தடைகளை தாண்டி உலகில் உயரம் குறைவான மருத்துவர் என்ற சாதனை படைத்திருக்கிறார். இவரது சாதனைக்கு பலதரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாரய்யா (23). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கணேஷ் பாராய்யாவுக்கு சிறு வயதில் இருந்தே மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. அதற்காக பள்ளிப்படிப்பை முடித்த கணேஷ் பாராய்யா, மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக நீட் தேர்விற்கு தயாராகினார். அதன் பிறகு, நீட் தேர்வில் 233 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

அந்த மதிப்பெண் எடுத்தும் கூட, கணேஷின் உயரத்தை காரணமாக காட்டி இந்திய மருத்துவ கவுன்சில், அவர் மருத்துவராக தகுதி இல்லை என மருத்துவ சீட்டு கொடுக்க மறுத்துவிட்டது. அதன் பிறகு அவர், தான் படித்த பள்ளியின் முதல்வரின் உதவியோடு, மாவட்ட ஆட்சியர், மாநிலக் கல்வி அமைச்சரை அணுகியுள்ளார். அதன் பின்னர், அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், அந்த வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் தோல்வி அடைந்த பிறகும் கூட கணேஷ் நம்பிக்கை இழக்காமல் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். 

The world's shortest man holds the record to become doctor

பல மாதங்களாக போராடிய கணேஷ், கடந்த 2018ஆம் ஆண்டில் வெற்றி பெற்று 2019ஆம் ஆண்டில் மருத்துவ சீட்டை பெற்றார். இப்போது அவர், மருத்துவ படிப்பை முடித்த பிறகு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். 

இது தொடர்பாக கணேஷ் பாராய்யா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “எனது உயரம் 3 அடி என்றும், அவசரகால வழக்குகளை என்னால் கையாள முடியாது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் குழு என்னை நிராகரித்துவிட்டது. பாவ்நகர் கலெக்டரின் வழிகாட்டுதலின் பேரில், நான் குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றேன். 2 மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் வழக்கில் தோல்வி அடைந்தோம். அதன் பிறகு, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடுத்தோம். நான் மருத்துவ சீட்டு பெறலாம் என்று கடந்த 2019ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. 

The world's shortest man holds the record to become doctor

அதன் பின்னர், எனக்கு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் கிடைத்தது. எனது மருத்துவ பயணமும் தொடங்கியது. நோயாளிகள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் முதலில் திடுக்கிட்டார்கள். சிறிது நேரத்தில், அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களின் ஆரம்ப நடத்தையையும் நானும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னுடன் அன்பாகவும் நேர்மறையாகவும் நடந்து கொள்கிறார்கள்” என்று கூறினார்.