mechanic who stole 41 cars and sold the parts separately

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவா (எ) தேவக்குமார். இவர் மேல் வடுகன் குட்டை பகுதியில் கார் மெக்கானிக் ஷேட் வைத்துள்ளார். பகல் நேரங்களில் இவர் நகர் பகுதிகளில் நோட்டமிட்டு இரவில் காரை திருடி வந்து இரவோடு இரவாக பிரித்து உதிரிப் பாகங்களை விற்று வந்துள்ளார். மேலும் திருட்டு கார்களை முழுமையாக அப்படியே போலி கார் எண்களைப் போட்டு விற்பனையும் செய்து வந்திருக்கிறார்.

இதுகுறித்து காட்பாடி காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்ததின் அடிப்படையில் காட்பாடி நீதிமன்றத்தில் காவல்துறையினர் அனுமதி பெற்று இன்று கார் மெக்கானிக் ஷேட்டை சோதனை செய்தனர். இதில் 41 கார்கள் எந்த வித ஆவணமுமில்லாமல் ஷேட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 27 கார்களை உதிரிப்பாகமாக வைத்திருந்தார் மீதமுள்ள கார்களையும் விற்க முயற்சி செய்துள்ளார்.

இதனால் காட்பாடி காவல்துறையினர் தேவகுமாரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரூ.1கோடியே 20 லட்சம் மதிப்பிலான கார்கள் அவரது ஷேட்டை இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், தமிழகம் முழுவதும் தேவக்குமார் கார்களை திருடி, அதன் பாகத்தை தனித்தனியாகப் பிரித்து விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.