Skip to main content

மதிமுக எம்பி கணேசமூர்த்தி பதவிஏற்பு... ஒரு ரூபாய்க்கு டீ கொடுத்து அசத்தும் தொண்டர்!!

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

 

திமுக கூட்டணியில் இடம் பெற்ற மதிமுகவுக்கு ஈரோடு பாராளுமன்றத் தொகுதி கொடுக்கப்பட்டது. வேட்பாளராக கணேசமூர்த்தி களமிறக்கப்பட்டார். உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றார். பலதேர்தல்களுக்கு பிறகு மதிமுகவுக்கு ஒரு எம்.பி கிடைத்திருப்பதால் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 

MDMK Ganeshamurthy MB Designation... Tea for a rupee by mdmk volunteer


இன்று கணேசமூர்த்தி எம்பியாக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நாளை கொண்டாடும் விதமாகவும் கணேசமூரத்தி எம்பிக்கு வாழ்த்துச் சொல்லும் விதமாகவும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றிய மதிமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கொன்றைக்காடு முத்தையன் தனது தேநீர் கடைக்கும் வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இன்று ஒரு நாள் முழுவதும் ஒரு டீ ஒரு ரூபாய்க்கும், வடை போன்ற பலகாரங்கள் ஒரு ரூபாய்க்கும் வழங்குகிறார். 

இந்த நிகழ்ச்சி காலை தொடங்கும் போது மதிமுக நிர்வாகிகள் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பல பலரும் நேரில் சென்று முத்தையனை பாராட்டினார்கள்.

 

MDMK Ganeshamurthy MB Designation... Tea for a rupee by mdmk volunteer


இதுகுறித்து முத்தையன் கூறும் போது.. தலைவர் வைகோவின் பேச்சைக் கேட்டு அந்த இயக்கத்தில் இருக்கிறேன். பதவிக்காக ஆசைப்பட்டவர்கள் கட்சி மாறலாம் ஆனால் நான் தலைவருக்காக கட்சியில் சேர்ந்தவன் அதனால் எப்போதும் மதிமுகதான். பல வருடங்களுக்கு பிறகு மதிமுக உறுப்பினர் பாராளுமன்றத்தில் கால் வைக்கிறார் என்பது பெருமையாக உள்ளது. அந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாட நினைத்தேன். பட்டாசு வாங்கி வெடித்து காசை கரியாக்கி சுற்றுச்சூலை மாசுபடுத்த விருப்பமில்லை.வேறு என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான் திருவள்ளூவர் தினத்தினத்தில் பேராவூரணியில் அய்யா தங்கவேலனார் ஒரு ரூபாய்க்கு டீ, காபி கொடுப்பது நினைவுக்கு வந்தது. நாமும் அதையே செய்யலாமே என்றுதான் இன்று எங்கள் எம்பி பதவி ஏற்கும் நாளில் காலை முதல் மாலை வரை தேனீர், பலகாரம் ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறேன் என்றார். இதேபோல மதிமுகவில் பாசமுள்ள தொண்டர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Next Story

“சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர்” - முத்தரசன் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Mutharasan condoles the demise of MP Ganesamoorthy

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக இருந்த மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், ஈரோடு மாவட்ட மூத்த அரசியல் முன்னோடியுமான அ. கணேச மூர்த்தி எம்.பி. (77) இன்று (28.03.2024) அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார் என்று துயரச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஈரோடு அருகில் உள்ள அவல் பூந்துறை, கவுண்டிச்சிபாளையம் என்ற ஊரில் செல்வாக்கு பெற்ற விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பெருந்துறை அரசு உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து சென்னையில் உயர் கல்வி பெற்றவர்.

கல்லூரி கல்வி பயின்ற காலத்தில் தமிழ் மொழி பற்று, தேசிய இனங்கள், தமிழர் தனித்துவ பண்புகள் குறித்த அறிஞர் அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தி.மு.கழக மாணவர் இயக்கத்தில் இணைந்து செயல்படத் தொடங்கியவர். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராக உயர்ந்தார். கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி தி.மு.கழக வேட்பாளராகத் தேர்தல் களம் இறங்கியவர். முதல் மூன்று முறை தொடர்ந்து தோல்வி அடைந்த போதும் கொள்கையில் நிலைகுலையாமல் பயணித்தவர்.

1977 முதல் 1992 வரையான காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்த நெருக்கடிகளை முன்னின்று எதிர் கொண்டவர். 1980களின் ஆரம்பத்தில் திமுக மாநில சிறப்பு மாநாடு நடத்தி தலைவர் கலைஞரிடம் 33 லட்சத்து 33 ஆயிரத்து 333 ரூபாய் நிதி வழங்கிய பெருமைக்குரியவர். கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் பேராதரவு பெற்று  தி.மு.கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டவர். 1989 மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.

கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து வைகோவுடன் இணைந்து மறுமலர்ச்சி தி.மு.கழகம் உருவாக்கியவர்களில் அ. கணேசமூர்த்தி குறிப்பிடத்தக்கவர். பொடா சட்டத்தின் கீழ் 19 மாதம் சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர். பழனி மக்களவைத் தொகுதியில் இருந்து இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வந்தவர். கட்சியின் உயர் பொறுப்புகளிலும் பணியாற்றியவர். உயர்ந்த பண்புகளின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய அ. கணேசமூர்த்தியின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. பொதுவாழ்வு பணிகளை ஒருங்கிணைக்கும் தலைமை பண்புமிக்க ஒருவரை ஈரோடு மாவட்டம் பறிகொடுத்து விட்டது.

அ. கணேசமூர்த்தியின் வாழ்விணையர் சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவர்களுக்கு கபிலன் என்ற மகனும் தமிழ் பிரியா என்கிற மகளும் பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். அ. கணேசேமூர்த்தியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.