Skip to main content

"செவ்வாயில் விவசாயம் செய்யக் கூட போகலாம்" - மயில்சாமி அண்ணாதுரை

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

mayilsamy annadurai talks about farmers farming in mars planet 

 

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய பள்ளி கட்டிட திறப்பு விழாவில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய வகுப்பறை, கணினி அறைகளை திறந்து வைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து பேசிய மயில்சாமி அண்ணாதுரை, "மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி தமிழ். அந்த தாய் மொழியில் படிப்பதை பெருமையாக கருதுவோம். சாதித்தவர்கள் எல்லாம் தாய் மொழியில் கற்றவர்கள் தான். அந்த தாய் மொழியை கற்பிக்கும் தாய்த் தமிழ் பள்ளிகள் குறைந்து கொண்டே வருகிறது. வளைகுடா நாடுகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 18 பள்ளிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. இவற்றிற்கு தமிழ்நாடு அரசு உதவிகள் செய்ய வேண்டும். தாய்த்தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களை அரசுப் பணியாளர்களாக ஏற்க வேண்டும்.

 

இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் நான் இட ஒதுக்கீடு இல்லாமல் தகுதி அடிப்படையில் வாய்ப்பை பெற்றவன். காரணம் தாய்மொழிக் கல்வி தான். 50% பேர் தாய் மொழியில் படித்தவர்கள் தான் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். எனது 12வது செயற்கைக்கோள் சந்திராயன். ஆனால் 60 செயற்கை கோள்களில் எனது பங்கு இருந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை ஆள் இல்லாமல் போன செயற்கை கோள்கள். ஆனால் இனி நிலவுக்கு இந்தியரும் தமிழரும் போகலாம். செவ்வாயில் விவசாயம் செய்யக் கூட போகலாம். இந்தியாவில் சிக்கனமாக, சீக்கிரமாக செயற்கை கோள் செய்கிறார்கள் என்பதால் அமெரிக்கர்கள் கூட இங்கு வரலாம். ஆனால் விண்வெளித்துறை தனியாருக்கு போகும் நிலை உள்ளதாக சொல்கிறார்கள். இதை தமிழ்நாடு அரசு முன்னின்று எடுத்து செய்யும் போது தமிழர்கள் அதிகம் வாய்ப்பு பெறுவார்கள். இதற்கு தாய்மொழிக் கல்வி மிகவும் அவசியம் என்றார்.

 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசும்போது, "தனி மனிதனுடைய உயர்வுக்கும், குடும்பத்திற்கும், நாட்டினுடைய உயர்வுக்கும் அடுத்த கட்ட நிலைக்கு போக வேண்டுமென்றால் கல்வி அவசியம். அந்தக் கல்வி தாய் மொழியில் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அந்த தாய்மொழி மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக இருக்கக்கூடிய தமிழ் மொழி.‌ அந்த தமிழ் மொழியை தாய்மொழியாக பெற்றுள்ள நாம் தாய்மொழியில் பயிலும் பொழுது இன்னும் சிறப்பாக தமிழர்களும் தமிழும் அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறப்பாக மிளிர முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதனுடைய வெளிப்பாடகத்தான் தாய்த் தமிழ் பள்ளியின் அடுத்த கட்ட முயற்சியாக புதிய கட்டடத்தை திறந்து வைக்க பெங்களூரிலிருந்து பறந்து வந்துள்ளேன். 

 

தாய்ப்பால் குடித்த குழந்தைகள் உடல் ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும் என்று அறிவியல் பூர்வமாக சொல்கின்றனர். அதில் கொஞ்சம் கூட குறைவில்லாமல் வாழ்க்கையில் சிறப்பாக செல்ல வேண்டும். போட்டிகளில் முன்னேற வேண்டும் என்றால் அடிப்படைக் கல்வி தாய்மொழிக் கல்வியாகத் தான் இருக்க வேண்டும். ஆங்கிலம் என்பது ஊடக மொழி தான் இன்னொருவருடன் பேசும் போது அதை பயன்படுத்திக் கொள்ளலாம். அதை பின்னால் வைத்துக் கொள்ளலாம். தன்னை அழகாக வெளிப்படுத்த தான் ஆடை. ஆடையாக நான் இல்லை. அந்த வகையில் நான் நானாக இருக்க வேண்டும் என்றால் சுயமாக என்னுடைய முகவரி என்னுடைய அடையாளம் என்ற பொழுது அது தாய் மொழி தான் வரும். சுய சிந்தனை தான் முக்கியம் சிந்தித்த பிறகு அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பது அதை ஆங்கிலத்தில் வெளிப்படுத்துங்கள் அதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் சிந்திப்பது கட்டாயம் தாய் மொழியாக இருந்தால் அது சிறப்பாக இருக்கும்." என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்களின் தபால் ஓட்டுகளில் குளறுபடி - 50% வாக்குகள் தேக்கம்? திட்டமிட்டு நடக்கிறதா?

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Confusion in the postal ballots of teachers on election duty- 50% of votes stagnated? Is it going as planned?


தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் பரபரப்பான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு பக்கம் வாக்குப் பதிவிற்கான ஆயத்தப்பணிகளைத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதேபோல 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் கோடிக்கணக்கில் செலவழித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தேவையான 3 கட்ட பயிற்சி வகுப்புகளும் இன்றோடு முடிந்துவிட்டது.

இந்தநிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு தேவையான வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டு பயிற்சி மையத்திலேயே வாக்களிக்கவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே தேர்தல் பணி பயிற்சியில் இருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இன்று 3 வது கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தபோது அஞ்சல் வாக்குப்பதிவும் நடந்துள்ளது. பயிற்சியில் இருந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களின் வாக்கைச் செலுத்த சனிக்கிழமை மாலை 3 மணிக்கே கடைசி நாள் என்பதால் அஞ்சல் வாக்குச் சீட்டுகளை பெறச் சென்றபோது ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் சுமார் 50% பேருக்கு வாக்குச் சீட்டுகள் இல்லை. மேலும் தனித்தனி அறைகளில் வாக்குப்பதிவுகள் நடத்தாமல் ஒரே அறையில் வாக்குப்பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் கொதிப்படைந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர், திருமயம், ஆலங்குடி உட்பட பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் பின்னர், அங்கு வந்த அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் இந்தக் குழப்பம் உள்ளது. மாநில தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து அனைவரும் வாக்களிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்த பிறகே கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பயிற்சியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் கூறும் போது, தபால் வாக்குகளில் புதுமையைப் புகுத்துவதாக நினைத்து பல மையங்களில் 50% முதல் 70% பேருக்கு வாக்குரிமையை இல்லாமல் பறித்துள்ளனர். இன்றே கடைசி நாள் என்று சொல்லிவிட்டு 27% பேருக்கு மட்டும் வாக்குச்சீட்டு கொடுத்துள்ளனர். தேர்தல் ஆணையம் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு செய்கிறது ஆனால் தேர்தல் பணியில் உள்ள எங்கள் வாக்கு உரிமையைப் பறிப்பது சரியா? நாங்கள் 18 ஆம் தேதியே தேர்தல் பணிக்கு போக வேண்டும் ஆனால், வாக்களிக்காமல் எப்படி நாங்கள் நிம்மதியாக வாக்குச்சாவடிக்குள் பணி செய்ய முடியும். பலரும் பல வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம். எங்களுக்கான வாக்குரிமை பறிக்கப்பட்டால் நாங்கள் எங்களுக்கான வாக்குச் சாவடிக்கு வாக்களிக்கத் தான் போவோமே தவிர தேர்தல் பணிக்கு போகமாட்டோம். இது தமிழ்நாடு முழுவதும் உள்ளது.

இதில் ஏதோ சூழ்ச்சி இருக்குமோ என்று நினைக்கிறோம். அதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 12 முதல் 15 ஆயிரம் பேர் தேர்தல் வாக்குப்பதிவு மையங்களில் பணியில் ஈடுபடுகிறோம் இத்தனை ஓட்டுகளும் வேட்பாளர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஓட்டுகளாக உள்ளதால் வேண்டுமென்றே இந்தச் சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் , புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடந்த 3 ஆம் கட்ட பயிற்சியில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக 6 இடங்களில் பயிற்சிகள் நடந்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் 25 முதல் 30 அறைகளில் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே பயிற்சிக்கு அனுப்பி இருந்தார்கள். அந்த இயந்திரங்களை எப்படி கையாளுவது என்று கூட பயிற்சி அளிக்கப்படவில்லை. பிறகு எப்படி வாக்குப்பதிவு மையங்களில் நாங்கள் இயந்திரங்களைக் கையாளுவது என்று தெரியவில்லை. மதிய உணவும் கூட தரவில்லை என்றனர்.

தபால் வாக்கு கிடைக்கவில்லை என்றால், பணி புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட சங்கங்கள் மூலம் பேசி வருகின்றனர். தபால் வாக்குப் பதிவில் ஏன் இந்தக் குளறுபடி? மாநில கட்சிகளுக்கு வாக்குகள் பதிவாகி விடும் என்பதால் இப்படி குளறுபடி செய்கிறார்களா என்ற அச்சம் பொதுமக்களிடமும் எழுந்துள்ளது.