Skip to main content

“எனக்கு வாழ பிடிக்கலம்மா, நான் போறேன்..” இரண்டு குழந்தைகளுடன் பெண் எடுத்த விபரீத முடிவு!

Published on 15/03/2022 | Edited on 15/03/2022

 

Mayiladuthurai woman passed away with her children

 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள தென்பாதி என்.எஸ்.பி. நகரில் உள்ள வாடகை வீட்டில் கார்த்திக், பாரதி எனும் தம்பதி வசித்து வந்தனர். கார்த்திக் ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று வயதில் கௌஷிக் என்கிற ஆண் குழந்தையும், ஒருவயதில் பவதாரணி என்கிற பெண்குழந்தையும் உள்ளனர். கார்த்திக் வாகனம் ஓட்ட வெளியூர் சென்றிருந்ததால் பாரதியும், அவரது இரண்டு குழந்தைகளும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.

 

கார்த்திக் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதால் அதனை திருப்பி அடைக்க முடியாமலும், பிள்ளைகளுக்கு என்று எதுவும் சேர்த்துவைக்க முடியாமல் போய்விட்டதே என மனைவி பாரதி தினம் வேதனை அடைந்து மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார்.

 

ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்களின் அவச்சொல்லால் நொந்துபோன பாரதி, தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து வீட்டின் அறையில் தூக்கில் தொங்கவிட்டுவிட்டு பிறகு பாரதியும் விஷமருந்தி வீட்டின் ஹாலில் உள்ள பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

பாரதி தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், ‘என் கணவர் கார்த்திக்கு அதிக அளவில் கடன் வாங்கிவிட்டார். அந்த கடன் எங்க இருவரையும் மட்டுமல்ல, ஒன்றும் அறியாத என் குழந்தைகளின் நலனையும் பாதிக்கிறது. வாங்கிய கடனை அடைக்க முடியாமல், மேலும் மேலும் கடன் வாங்கும் சூழ்நிலையே இருக்கு. நான் மட்டும் இறந்துபோனால் என் குழந்தைங்க அனாதைகளாக கையேந்தி நிக்குங்க. அதனால என்னோடவே கூட்டிட்டு போறேன். என்னோட தற்கொலைக்கு வேறு எதுவும், யாரும் காரணம் இல்லை. பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் காதல் கல்யாணம் செய்து கொண்டது என்னுடைய தவறு. இதை நான் இறக்கும் தறுவாயில் உணர்கிறேன்’ என்று கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

 

மேலும் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, பாரதி தனது தாய் சித்ராவை செல்போனில் தொடர்பு கொண்டு "எனக்கு வாழ பிடிக்கலம்மா, நான் போறேன், என்கூடவே என் குழந்தைங்களையும் கூட்டிட்டு போறேன்" என சோகமாக பேச, பதறித்துடித்து பாரதியின் அம்மா சித்ரா வருவதற்குள் மூன்று பேரும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டனர்.

 

இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தாய் குழந்தை உள்ளிட்ட 3 பேரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்