தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 56 ஆயிரம் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் காண்கிறார்கள். இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்து வருகிறது.
அடுத்த வாரம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சில இடங்களில் வேட்பாளர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட 19 வார்டு அதிமுக வேட்பாளர் அன்னதாச்சி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனால் அந்த வார்டுக்கு தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.