Skip to main content

மயிலாடுதுறை மாவட்டம்...  நனவாகும் கால் நூற்றாண்டு கனவு!

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாகிறது. சட்டமன்றத்தில் இதற்கான அறிவிப்பை 110வது விதியின்கீழ் அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. 30 ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்திருந்த தஞ்சை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் நான்காவது மாவட்டம், மயிலாடுதுறை.

mayiladuthurai


தஞ்சை மாவட்டம் ஒன்றாக இருந்தபோதே தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பெரிய கட்சிகளின் நிர்வாக அமைப்புக்காக கீழத்தஞ்சை மாவட்டம், மேலத்தஞ்சை மாவட்டம் என இரண்டாகப் பிரித்து அவற்றுக்குத் தனித்தனியாக மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் வழக்கம் தொடங்கிவிட்டது. கீழ(கிழக்கு)த் தஞ்சை மாவட்டத்திற்குட்பட்டது மயிலாடுதுறை. இதனை மாயூரம், மாயவரம் என்று மக்கள் அழைத்து வந்த நிலையில், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, ‘மயிலாடுதுறை’ என்கிற பழந்தமிழ்ப் பெயரைச் சூட்டினார். எனினும், ‘ஆயிரம் இருந்தாலும் மாயூரம் போல வருமா’ என்றபடி இன்னமும்கூட, ‘மாயூரத்துக்கு டிக்கெட் கொடுங்க’ என்கிற குரலைப் பேருந்துகளில் கேட்க முடியும்.


தமிழ்நாட்டில் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை அதிகப்படுத்தும் முயற்சி எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தொடங்கியது. அதற்கு முன்பாக, காங்கிரஸ் ஆட்சியில் சேலத்திலிருந்து தர்மபுரி, கலைஞர் ஆட்சியில் திருச்சி-தஞ்சை  மாவட்டங்களிலிருந்து புதுக்கோட்டை என ஓரிரு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், எம்.ஜி.ஆர். ஆட்சியில் கோவையிலிருந்து ஈரோடு பெரியார் மாவட்டம், மதுரையிலிருந்து திண்டுக்கல் அண்ணா மாவட்டம், ராமநாதபுரத்திலிருந்து விருதுநகர் காமராஜர் மாவட்டம், சிவகங்கை பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

 

mayilai



அத்துடன், திருச்சி மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் திருவள்ளுவர் மாவட்டம், கரூர் தீரன் சின்னமலை மாவட்டம் ஆகிய தனி மாவட்டங்களும், வேலூரிலிருந்து திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டத்தையும், தஞ்சையிலிருந்து திருவாரூர் தில்லையாடி வள்ளியம்மை மாவட்டத்தையும் பிரிப்பதாக எம்.ஜி.ஆர். ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அவை நிறைவேறுவதற்கு முன்பாக 1987ல் எம்.ஜி.ஆர்.  இறந்துவிட்டார். பின்னர் கலைஞர், ஜெயலலிதா ஆட்சிக்காலங்களில் புதிய மாவட்டங்கள் பிரிப்பது தொடர்ந்தன.


தஞ்சை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்ட தில்லையாடி வள்ளியம்மை மாவட்டம் என எம்.ஜி.ஆர் ஆட்சியில் அறிவிக்கப்பட்டபோதே அது சர்ச்சையானது. திருவாரூரை விட பெரிய நகரங்களான நாகப்பட்டினம், கும்பகோணம், மயிலாடுதுறை பகுதி மக்களும் வணிகர்களும் அரசியல் பிரமுகர்களும் தங்கள் நகரத்தைத் தலைநகராகக் கொண்டே புதிய மாவட்டம் பிரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.


1989ல் 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு தி.மு.க. ஆட்சி அமைந்தபோது தஞ்சை மாவட்டப் பிரிப்பு தொடர்பான கோரிக்கைகள் தொடர்ந்தன. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் பிரமுகர்களுக்கிடையிலானப் போட்டியினால் கலைஞர் ஆட்சியில் தஞ்சை மாவட்டப் பிரிப்பு தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை. அதேநேரத்தில், எம்.ஜி.ஆர். ஆட்சியில் திண்டுக்கல்லை அண்ணா மாவட்டம் என்று பெயர்சூட்டியதை மாற்றி, அதற்கு காயிதே மில்லத் மாவட்டம் என்றும், காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்ட செங்கல்பட்டு மாவட்டத்துக்கு அண்ணா மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


1991-96 ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் தஞ்சை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. நாகையைத் தலைநகரமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது, திண்டுக்கல் மாவட்டத்துக்கு மீண்டும் அண்ணா மாவட்டம் எனப் பெயர் சூட்டப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட நாகை மாவட்டத்துக்கு காயிதே மில்லத் பெயர் வைக்கப்பட்டது. இப்படித் தலைவர்களின் பெயர்கள் டிரான்ஸ்பர் ஆகும் அரசியல் ஒருபுறம் நடக்க, புதிய மாவட்டத் தலைநகர்  தேர்வும் சர்ச்சையானது. அப்போதே, மயிலாடுதுறைவாசிகள் தங்கள் ஊரின் சிறப்பு, கட்டமைப்பு வசதிகள், பொருளாதார நிலவரம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி தங்கள் ஊரை மாவட்டத் தலைநகராக்க வேண்டும் என வலியுறுத்தி, கோரிக்கைகள் வைத்தனர்.


1996-2001 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்த கலைஞர், திருவாரூரைத் தலைநகராகக் கொண்ட ஏ.டி.பன்னீர்செல்வம் மாவட்டத்தை உருவாக்கினார். நீதிக்கட்சித் தலைவர் பெயரிலான இந்தப் புதிய மாவட்டம், ஏற்கனவே எதிர்பார்ப்பில் இருந்த மயிலாடுதுறைவாசிகளை ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. நாகை மாவட்டத்திற்குட்பட்டிருந்த மயிலாடுதுறையின் நலன்களும் வளர்ச்சித் திட்டங்களும் ஒவ்வொரு ஆட்சியிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக தங்களின் அதிருப்தியை வலியுறுத்தி வந்தனர். (மாவட்டங்கள்-போக்குவரத்துக் கழகங்களுக்குத் தலைவர்கள் பெயர் சூட்டுவது சாதிரீதியான மோதல்களை உருவாக்கியதால் மாவட்டங்களின் தலைநகருடன் இணைந்திருந்த தலைவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு, அந்தந்த ஊர் பெயரிலேயே மாவட்டங்கள் அழைக்கப்படுகின்றன.
 

 

mayilai



பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து அரியலூர், தர்மபுரியிலிருந்து கிருஷ்ணகிரி என புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோதும் மயிலாடுதுறை மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டபோது, மயிலாடுதுறை மாவட்டத்தின் கோரிக்கை வலுப்பெற்றது. அண்மையில், நாகையில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும்போது, மயிலாடுதுறை மாவட்டம் பற்றி பரிசீலிக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அந்தப் பரிசீலனை, மார்ச் 24ந் தேதி சட்டமன்றத்தில் அறிவிப்பாக நிறைவேறியது. தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாகிறது மயிலாடுதுறை.


 

mayiladuthurai


 

கால் நூற்றாண்டு கால கனவு நனவாகும் தருணத்தில் கட்சி எல்லைகளைக் கடந்து மயிலாடுதுறை மக்கள் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நன்றி தெரிவித்தனர். புதிய மாவட்டத்திற்கான ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இனிமேல்தான் உருவாக்கப்படவேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்திருந்த தஞ்சை மாவட்டம் தற்போது தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை என 4 மாவட்டங்களாகப் பிரிந்திருப்பது அந்தந்தப் பகுதியில் வாழ்கிற மக்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவதுடன், புதிய வசதிகளை உருவாக்கி அவர்களின் அலைச்சலையும் குறைக்கிறது.


இந்த 4 மாவட்டத் தலைநகர்களையும்விட, தொழில்வாய்ப்பிலும், வணிகத்திலும், பொருளாதார வசதியிலும் சற்று மேலோங்கியிருக்கும் கும்பகோணத்தை தலைநகராகக் கொண்ட மாவட்டம் பற்றிய நெடுநாள் கோரிக்கை எப்போது நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு அப்பகுதிவாசிகளிடம் அதிகரித்துள்ளது. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.