/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/5_110.jpg)
மயிலாடுதுறை அருகே மது அருந்தி இருவர் உயிரிழந்தது திட்டமிட்ட கொலை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சொத்து தகராறு காரணமாக மதுவில் சயனைடு கலந்து கொடுக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட தட்டங்குடி மெயின் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் பழனி குருநாதன். கொல்லப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவருடைய கொல்லப்பட்டறையில் அதே பகுதியைச் சேர்ந்த பூராசாமி என்பவர் பணியாற்றி வந்தார். இருவரும் நண்பர்கள் போல் பழகி வந்த நிலையில் நேற்று மாலை மது அருந்தியுள்ளனர். அப்போது மது அருந்திய சில மணி நேரத்திலேயே இருவரும் அதே இடத்தில் துடிதுடித்து மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இருவரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. மது அருந்தியதால் தான் இருவரும் உயிரிழந்தார்கள் என உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், இதுகுறித்து விசாரிக்க மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் இருவர் உடலும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் முதல் கட்டமாக அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்துள்ளது தெரியவந்துள்ளது. எந்த கடையில் வாங்கப்பட்ட மது எனவும் சயனைடு கலந்தது யார் என்பது தொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மதுபானத்தில் சயனைடு கலந்திருந்ததாகவும், சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்ததாக பழனி குருநாதனின் சகோதரர்கள் (தந்தையின் முதல் மனைவியின் மகன்கள்) மனோகர், பாஸ்கர் என இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)