May pay for part-time teachers! Will the government provide?

Advertisment

பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களைக் கடந்த 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா நியமித்தார். ஆனாலும் நியமனம் செய்தது முதலே மே மாதம் சம்பளம் கொடுக்காமல் முந்தைய அதிமுக அரசால் மறுக்கப்பட்டது. எத்தனையோ முறை கோரிக்கை வைத்திருந்தாலும் 10 ஆண்டுகளும் மே மாதம் மட்டும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை.

இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக புதிய ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையிலும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என நம்பிக்கை கொடுத்துள்ளது. ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் ஏற்கனவே பெறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தனித்துறை ஏற்படுத்தி, தனி அதிகாரியை நியமித்துள்ளார் முதல்வர். இதிலும் கோரிக்கை மனுக்களைப் பகுதிநேர ஆசிரியர்கள் கொடுத்துள்ளார்கள். எனவே கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளார்கள்.

இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி. செந்தில்குமார் கூறியதாவது, “கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க, அரசு ஊரடங்கைஅறிவித்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் மே மாதம் சம்பளம் கொடுத்து அனைவரின் குடும்பங்களுக்கும் உதவிட முதல்வர் ஸ்டாலின் அவர்களை வேண்டுகிறோம். பெருமனதுடன் முதல்வர் அவர்கள்12 ஆயிரம் குடும்பங்களுக்கு இம்முறை மே மாதசம்பளத்தை வழங்கினால், இவர்களின் உணவு, வீட்டு வாடகை குறித்த கவலைகள் குறையும். ஏற்கனவே, மே மாதம் சம்பளம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி நல்ல விடியலைக் கொடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி ஒன்றில் பதில் சொன்னதை ஆவலாக நாங்கள் எதிர்பார்த்துவருகிறோம்” என்றார்.