'May he get well soon' - Ramadoss wishes

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ளார்.

Advertisment

இதுகுறித்து துரை வைகோ வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், 'மதிமுக இயக்கத் தந்தை தலைவர் வைகோ நலம் பெறுவார்; மதிமுகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேலின் மகள் மண விழாவில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்கள்.அப்பொழுது எதிர்பாரா விதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

Advertisment

மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் உடல்நலம் பெறுவார்கள்; வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசியல் கட்சியினர் பலரும் வைகோ உடல்நலம் பெற வேண்டும் என விருப்பத்தை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விரைவில் நலம் பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'கலிங்கப்பட்டி வீட்டில் தவறி விழுந்ததில் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு சென்னை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படவிருக்கிறது. வைகோ அவர்கள் விரைவில் முழுமையாக உடல் நலம் பெற்று அரசியல் பணியைத் தொடர வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Advertisment