Skip to main content

மே தினத்தை கொண்டாட தடையில்லை!! தேர்தல் அதிகாரி உத்தரவு:தோழர்கள் உற்சாகம்!!

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

உலகம் முழுக்க வருடத்திற்கு ஒரு நாள் அது தங்களின் திருநாளாய் உழைப்பாளர்கள், தொழிலாளி வர்க்கம் கொண்டாடப்படும் தினம் தான் மே தினம். மே 1 ந் தேதி.

 

மே தினத்தன்று புதிய செங்கொடிகளை பறக்க விட்டு தொழிலாளர்கள் , தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தியாகிகளை போற்றி விண்ணதிர முழக்கமிட்டு செங்கொடிகளை ஏந்தி வீதிதோறும் ஊர்வலம் வந்து பொதுக் கூட்டங்கள் நடத்தி மே தினத்தை சிறப்பு சேர்ப்பது வழக்கம். இடதுசாரி இயக்கங்கள் மட்டுமல்லாது திராவிட இயக்கங்களும் மே தினத்தை தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

 

 

may one

 

 

may one

 

ஆனால் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது என்பதை காரணம் காட்டி மே தின நிகழ்வுகளுக்கு அந்தந்த ஊர் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாய தொழிளாளர் சங்கத்தின் தலைவரும் பெருந்துறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான தோழர் நா.பெரியசாமி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி.தொழிற்சங்க மாநில தலைவர் திருப்பூர் சுப்பராயன், மாநில செயலாளர் மூர்த்தி ஆகியோர் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு  மே தின நிகழ்ச்சிகள் தமிழகம் முழுக்க நடத்திக் கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும் தேர்தல் நடத்தை விதியை காரணம் காட்டி பல ஊர்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. 

 

may one

 

மே தினத்தின் வரலாற்று பின்னனி மற்றும் இதற்கு முன்பு மே தின நேரத்தில் தேர்தல் வந்த போது மே தின நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி கொடுத்தது என்ற விரிவான கடிதத்தை தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு அவர்களிடம் ஒரு வாரத்திற்கு முன்பே கொடுத்தனர். 

 

இந்த நிலையில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு அனைத்து மாவட்ட தேர்தல் / ஆட்சியர்களுக்கு அனுப்பிய அரசாணையில் மே தின நிகழ்ச்சிகள், கொடியேற்றுவது, பொதுக் கூட்டம் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

இதனால் மே தினத்தை கொண்டாட எந்த தடையும் இல்லை என்பதால் தோழர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஜி கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ராஜசேகரன் மறைவு! 

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Former communist MLA S. Rajasekaran passed away

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜசேகரன் மறைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நிறைந்திருந்த குளமங்கலம் வடக்கு கிராமத்தில் ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ராஜசேகரன். கீரமங்கலத்தில் பள்ளியில் படிக்கும் போது கிராமங்கள் தோறும் நடக்கும் கம்யூனிஸ்ட் மக்கள் நலப் போராட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்களைப் பார்த்து இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு ஜமீன் ஒழிப்பு போராட்டம், தொழிலாளர் நலப் போராட்டங்களில் பங்கேற்றவர். பல போராட்டங்களை முன்னெடுத்து வெற்றியும் கண்டார். அதேபோல படிப்படியாக கட்சிப் பதவிகளிலும் முன்னேறினார்.

2001ம் ஆண்டு ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டாலும் அடுத்து 2006ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

2011ல் சட்டமன்ற உறுப்பினர் காலம் முடிந்த பிறகு கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அதன் பிறகும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீட்டிலேயே இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு புதுக்கோட்டையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் இன்று புதன் கிழமை உயிரிழந்தார்.

Next Story

ஆளுநர் தேநீர் விருந்து; காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு!

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Governor's Tea Party; Congress, Communist parties boycott

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பர்.

அந்த வகையில் குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி  மாலை ஆளுநர் ஆர்.என். ரவி தேநீர் விருந்து அளிப்பது குறித்து அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.