Skip to main content

நிஜ  ‘ஹீரோ’ ஆவாரா விஜய்? -ரசிகர் காட்சி ரௌத்திரம்!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021
master in sivakasi theater

 

1981-ல் ‘சட்டம் ஒரு இருட்டறை’ ரிலீஸ் ஆனது. சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி ஹீரோ எப்படியெல்லாம் கொலை செய்கிறான் என்பதே கதை. பின்னாளில் ‘புரட்சி இயக்குநர்’ என்றழைக்கப்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் படம் இது. இத்திரைப்படத்தின் கதாநாயகன் விஜயகாந்த் பெயரும்கூட விஜய்தான்.

 

அதே (தந்தை) எஸ்.ஏ.சந்திரசேகர் திரைக்கதையில், (மகன்) விஜய் நடித்து  2002-ல் ரிலீஸான படம் தமிழன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மையப்படுத்தியே,  இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது.  
தமிழன் க்ளைமாக்ஸில் ஹீரோ விஜய் பேசி பிரபலமான வசனம் இது -  
‘ஒரு இந்து கீதையை தெரிந்திருக்காரோ இல்லையோ,
ஒரு இஸ்லாமியர் குரான் தெரிந்திருக்காரோ இல்லையோ,
ஒரு கிறிஸ்தவர் பைபிள் தெரிந்திருக்காரோ இல்லையோ,
ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்திய அடிப்படைச் சட்டம் தெரிந்திருக்க வேண்டும்.’

 

நாற்பது வருடங்களுக்கு முன் வெளிவந்த  ‘சட்டம் ஒரு இருட்டறை’, 18 வருடங்களுக்கு முன் வெளிவந்த  ‘தமிழன்’ குறித்தெல்லாம் இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன? விஜய் நடிப்பில் இன்று ரிலீஸான ‘மாஸ்டர்’ திரைப்படம்தான்!

 

master in sivakasi theater

 

முன்பெல்லாம், முன் கூட்டியே சினிமா டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு, தியேட்டர் முன்பாக ‘பிளாக்கில்’ விற்பார்கள். மாமூல் கிடைத்தாலும்கூட, அவ்வப்போது இந்த பிளாக் டிக்கெட் பேர்வழிகளை அடித்து இழுத்துக்கொண்டு போய், போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள். அப்படியென்றால், கூடுதல் விலைக்கு சினிமா டிக்கெட் விற்பது சட்ட விரோதம்தானே?

 

சிவகாசியில் ஒரு தியேட்டரில் ‘ரசிகர் ஷோ’ என்ற பெயரில் ஒரு நாள் முழுவதும் அனைத்துக் காட்சிகளுக்கும், டிக்கெட் ஒன்றுக்கு ரூ.450 என, கட்டணமாக வசூலித்துக் கொண்டிருந்தனர் சிலர். அந்த டிக்கெட்டுகள் விஜய்யின் ரசிகர் மன்றத்தின் மூலம் பெற்று விற்கப்படுகிறது எனக் கூறப்பட்டது. தமிழகத்தில், சட்டத்துக்கு மதிப்பளிக்கும் சில தியேட்டர்களைத் தவிர, பல தியேட்டர்களிலும் இந்த கட்டணக் கொள்ளை பகிரங்கமாகவே நடக்கிறது.

 

மதுரையோடு ஒப்பிடும்போது, மக்கள் தொகையில் சிவகாசி, பதினைந்தில் ஒரு பங்குதான்! மதுரை வெற்றி தியேட்டரில், மாஸ்டர் திரைப்படத்துக்கான கட்டணம் ரூ.190 மட்டுமே! மதுரை வெற்றி தியேட்டரின் தரத்தோடு சிவகாசி தியேட்டரை ஒப்பிடவே முடியாது. ஆனால், மதுரை வெற்றி தியேட்டரைக் காட்டிலும் 2 மடங்குக்கும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 

master in sivakasi theater

 

திரையில் விஜய் பேசிய பஞ்ச் டயலாக்குக்கு விசிலடிக்கும் ரசிகர்களும் சரி.. இரண்டு மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி, முதல் நாளே சினிமா பார்க்கின்ற இந்தியக் குடிமகன்களும் சரி.. இந்திய அடிப்படைச் சட்டம் தெரியாதவர்களாக அல்லவா இருக்கின்றனர்!  

 

மாஸ் ஹீரோவான விஜய், கூடுதல் கட்டண விவகாரத்தைக் கையிலெடுத்து, முதலில் தன்னிடமிருந்தும், தனது ரசிகர்களிடமிருந்தும், மாற்றத்தைக் கொண்டுவந்தால், நிஜத்திலும் ஹீரோதான்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இந்த முறை காரில் வருகை; கையில் பிளாஸ்திரி’ - ஜனநாயக கடமையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
casted his vote at Neelankarai polling station. T.V.K. Leader Vijay

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வீட்டிலிருந்து வந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் தற்போது தனது வீட்டில் இருந்து கார் மூலம் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.  சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் த.வெ.க. தலைவராக முதல்முறையாக வாக்களித்துள்ளார். காயம் காரணமாக கையில் ப்ளாஸ்திரி ஒட்டியுள்ள நிலையில் தற்போது வாக்கினை செலுத்தியுள்ளார்.முன்னதாக கோட் படப்பிடிப்பிற்காக துபாயில் இருந்த விஜய் இன்று காலை விமானத்தின் மூலம் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தொடங்கியது சர்ச்சை - விஜய் பாடலுக்கு எதிராகப் புகார் 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
complaint against vijay the goat song whistle podu lyrics

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, புதுச்சேரி, கேரளா, உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதிர்த்தியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘விசில் போடு’ பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது. விஜய் பாடியுள்ள இப்பாடல் யூட்யூபில் தற்போது வரை 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நமபர் 1 இடத்தில் இருக்கிறது. விஜய்யுடன் இணைந்து இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் பாடியுள்ளனர். ராஜு சுந்தரம் நடனம் அமைத்திருக்க மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல், படத்தில் ஒரு குழுவாக பணியாற்றும் விஜய், பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகியோர் ஜாலியாக ஒரு பார்ட்டி செய்யும் சூழலை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பாடலில் ‘கேம்பைன தான் தொறக்கட்டுமா, மைக்க கையில் எடுக்கட்டுமா’ என விஜய்யின் அரசியல் டச்சும், ‘நண்பா நண்பி விசில் போடு’ என விஜய்யின் ஃபேவரட் டயலாக்குகளும் இடம்பெறுகின்றன.  

இந்த நிலையில் இப்பாடலின் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புகார் மனு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மனுவில், “நடிகர் விஜய் தொடர்ந்து பிரச்சனையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். லியோ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார் என்பதையும் இங்கு சுட்டி காட்டுகிறேன். தற்போது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகியுள்ள விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார். குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டத்தின்படி போதைப் பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம் பெறும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜய் அதை வைக்கவில்லை.!

அதிரடி கெளப்பட்டுமா? சேம்பைன தான் தொறக்கட்டுமா? இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் ரவுடியிசத்தை ஆதரிக்கும் வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளது. மைக்கை கையில் எடுக்கட்டுமா? தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பாக சீமான், கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகத்தை, ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது. இடி இடிச்சா என் வாய்ஸ் தான் வெடி வெடிச்சா என் பாய்ஸ், விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில் வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் விஜய். குடிமக்கள் தான் நம் கூட்டணி, விஜய் மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமல் தன் படத்திற்காக வாயைத் திறக்கும் நடிகராக விஜய் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் விஜய் செயல்பட்டு வருகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி தான்’ பாடல் லிரிக் வீடியோ வெளியான போது, விஜய் புகைபிடித்துக் கொண்டே பாடல் முழுவதும் நடனமாடியது விமர்சனத்துக்குள்ளானது. மேலும் பாடல் வரிகளில் மதுபானம் போன்றவை இடம்பெற்றிருப்பதாலும் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளிக்க பின்பு அப்பாடலில் 'புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரைக் கொல்லும்' என்ற எச்சரிக்கை வாசகம் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விஜய்யின் படங்கள், தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் தற்போது தி கோட் படத்திற்கும் அது தொடர்கிறது.