Skip to main content

வயதான தம்பதிக்கு குறி; நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கும்பல்!

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Masked robbers have robbed an old people's home in the middle of the night

 

காவேரிப்பட்டணம் அருகே, வீட்டில் தனியாக வசித்து வரும் வயதான தம்பதியை கத்திமுனையில் மிரட்டி 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான 80 பவுன் நகைகள், 3 லட்சம் ரூபாய் ரொக்கம், வெள்ளி பொருள்களை முகமூடி கும்பல் கொள்ளை அடித்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சப்பாணிப்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (88). அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சென்னம்மாள் (77). இவர்கள் தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சப்பாணிப்பட்டி மேம்பாலம் அருகே தனியாக வசித்து வருகின்றனர்.     

 

இந்நிலையில், மார்ச் 21ம் தேதி தம்பதியினர் இரவு உணவு முடிந்து வழக்கம்போல் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் முகத்தில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு வந்த மர்ம நபர்கள் 3 பேர், ரங்கசாமி வீட்டுக்குள் திடீரென்று புகுந்தனர். சத்தம் கேட்டு பதற்றத்துடன் எழுந்த ரங்கசாமி அச்சத்தில் கூச்சல் போட்டார். அப்போது மர்ம நபர்கள், தம்பதியினர் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தியபடி, கத்தி கூச்சல் போட்டால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். பின்னர் அந்த கும்பல், அவர்களுடைய வீட்டு அலமாரியில் இருந்த 80 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அவற்றின் மொத்த மதிப்பு 35 லட்சம் ரூபாய் என்கிறார்கள்.  

 

இதுகுறித்து காவேரிப்பட்டணம் காவல்நிலையத்தில் ரங்கசாமி புகார் அளித்தார். அதன்பேரில், காவல்துறையினர் நிகழ்விடம் சென்று விசாரித்தனர். விரல்ரேகை பிரிவு நிபுணர்கள், நிகழ்விடத்தில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். வயதான தம்பதியினர் தனியாக வசிப்பதை நோட்டமிட்ட கும்பல்தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், இந்த தம்பதியினர் குறித்து நன்கு அறிந்த நபர்கள் கூட இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கருதுகின்றனர். நிகழ்விடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வயதான தம்பதி வசிக்கும் வீட்டை குறி வைத்து நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.