Skip to main content

9 வருடமாக பென்ஷன் கேட்டுப் போராடும் தியாகியின் மகள்... பாத்திரம் தேய்த்து பிழைக்கும் அவலம்!

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

Martyrs

 

தேசம் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி கொண்டிருக்கிறது. ஆனால் ஒன்பது வருடமாக பென்ஷன் கேட்டுப் போராடி வருகிறார் சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகள் ஒருவர்.

 

தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி நகரைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த போது நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் ஐ.என்.ஏ. படையில் அப்போதைய காலத்தில் ஏழாயிரம் டாலர் கொடுத்து இணைந்தவர். சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1972ன் போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுதந்திரப் போராட்ட தியாகம் காரணமாக மாடசாமிக்கு தாமிரப் பட்டயம் வழங்கி கௌரவித்தார். மாடசாமிக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும் , ராமகிருஷ்ண போஸ், ராஜகோபால் என இரு மகன்களும், ராமஜெயம், இந்திரா என்று இருமகள்களும் உள்ளனர். மற்றவர்கள் திருமணமாகிச் சென்றுவிட 2002ல் தந்தை மாடசாமி காலமானார். திருமணமாகாமல் தனிமையான இந்திரா, தன் வயதான தாய் வள்ளியம்மாளுடன் வசித்திருக்கிறார்.

 

இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு தாய் வள்ளியம்மாளும் வயது மூப்பு காரணமாக மரணமடைய, ஆதரவற்ற இந்திரா தனியே வசித்திருக்கிறார். இதையடுத்துத்தான் சுதந்திரப் போராட்டத் தியாகியின் வாரிசு என்ற அடிப்படையில் அவரின் வாரிசு வழி பென்ஷனுக்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மூலமாக மத்திய அரசின் தியாகிகள் பென்ஷன் துறைக்கு ஆவணங்களுடன் மனுச் செய்திருக்கிறார். அன்று தொட்டு இன்று வரை 9 ஆண்டாக அவரின் பென்ஷனுக்கான போராட்டம் முடிவின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 

 

Martyrs

 

இதுகுறித்து அவர் பேசுகையில், ''சுதந்திரப் போராட்ட தியாகி என்ற வகையில் அப்பாவுக்கு மத்திய அரசின் சுதந்திர சைனிக் சம்மன் பென்ஷன் கிடைத்தது. அவரது மறைவுக்குப் பின் அவரது குடும்பத்தில் திருமணமாகாத பெண் இருந்தா அவருக்குப் பென்ஷன் உரிமை உண்டுன்னு விதியிருக்கு. முறைப்படி மத்திய அரசு பென்ஷன் துறைக்கு பென்ஷன் கேட்டு மனு கொடுத்தேன். தாலுகா ஆபீஸ், முதல்வர் தனிப்பிரிவுன்னு பென்ஷனுக்கு பல தடவை மனு அனுப்பினேன். பதில் இல்லை. மதுரைக் கோர்ட்டிலும் முறையிட்டேன். 2014ல பென்ஷன் குடுக்கனும்னு தீர்ப்பாச்சு. மத்திய அரசுக்கு பென்ஷன் கேட்டு கலெக்டர் மூலமாகக் கடிதம் போச்சு. ஆனா அது தமிழ்ல இருக்கு ஆங்கிலத்தில் கடிதம் அனுப்புங்கன்னு கேட்டப்ப ஆங்கிலத்திலும் மத்திய பென்ஷன் துறைக்கு கடிதம் போச்சு. அப்புறமா சான்றொப்பம் இல்லைன்னாக. அந்த ஆவணங்களையும் வாங்கி அனுப்பினோம். அப்புறமா மொத்தப் பென்ஷன் பேப்பர்களை அந்த துறை திருப்பி அனுப்பிடுச்சி. எனக்கு இடி இறங்கின மாதிரி ஆயிடிச்சி.

 

எனக்கு 51 வயசாவுது. உடம்புல பிரச்சனை இருக்கு. ஆபரேஷன் பண்ணியிருக்கு. வேல செய்ய முடியல. ஆனா நான் இன்னும் பருவத்துக்கு வரல. சாப்பாட்டுக்கே கஷ்டம் ஆதரவில்லாத ஒண்டியான நா ஹோட்டல்ல பாத்திரம் கழுவி 100 ரூபாய் கூலி வாங்கி வாழறேன். என்னோட கஷ்டத்தப் பாத்து வீட்டு உரிமையாளர் வாடகை கேட்கல. பணம் கெடைச்சாக் குடுன்னு நல்ல மனசோட சொன்னார். மத்த தியாகிகளோட வாரிசுக உதவியிலயும் பக்கத்து வீட்டுக்காரவுக உதவியிலயும் இருக்கேன்.

 

 

Martyrs

 

ஒவ்வொரு சுதந்திர தின கொடியேற்றத்தன்னைக்கும் தியாகியோட வாரிசுன்ற முறையில் அழைக்கறாக. கலெக்டரும் சால்வைப் போட்டு வாழ்த்துறார். அது சாப்பாட்டுக்கு உதவுமா. அவங்க கேட்ட ரெக்கார்டுலாம் குடுத்திட்டேன். பென்ஷன கேட்டு தாசில்தார் ஆபீஸ், கலெக்டர் ஆபீசுன்னு வருசக் கணக்குல அலைஞ்சே ஓய்ஞ்சு போயிட்டேம்யா. இனிமே என்னய சுதந்திரதினத்திற்குக் கூப்பிடாதீங்க. அரசு மரியாதை வேணாம்னு சொல்லிட்டேம்யா, முடியல. வாழ முடியல. என்னயக் கருணைக் கொலை பண்ணிடுங்கன்னு ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் மனு அனுப்பிருக்கேன்யா'' என்றார் தொண்டை அடைக்க வேதனையோடு.

 

nn

 

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகளின் நல சங்கத்தின் கோவில்பட்டி தாலுகா செயலாளரான செல்வமோ, ''அதிகாரிகளின் அலைக்கழிப்பினால்தான் தகுதியிருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் பென்ஷனுக்கு விண்ணப்பிக்கல. முன்னாள் படைவீரர்களுக்கு நல வாரியம் இருப்பது போன்று சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் நல வாரியம் அமைக்கப்படவேண்டும். திங்கள்கிழமை குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது போன்று விதி இருந்தும் தியாகிகளின் குறைதீர் கூட்டம் நடத்தப்படல. தியாகிகளின் வாரிசுகளுக்கு பென்ஷன் மற்றும் கல்வி வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை தரப்படவேண்டும்'' என்றார்.

 

தியாகி மாடசாமியின் வாரிசு பென்ஷன் தொடர்பான அனைத்து ஆவணங்களும் அத்துறையினருக்கு அனுப்பப்பட்டுவிட்டது என்று ஆட்சியர் அலுவலக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். சுதந்திரப் போராட்ட தியாகிகள், வாரிசுகளின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்.

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவில் சேர்ந்த தமிழிசை; தேர்தலில் மீண்டும் வாய்ப்பா?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Tamilisai joined BJP; A SEAT again?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் இன்று திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை மீண்டும் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் மீண்டும் அவர் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியை பெற்று பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் தமிழிசைக்கு பாஜகவில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி வாய்ப்பளித்தால் மீண்டும் தூத்துக்குடியில் தமிழிசை நிற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கெனவே திமுகவில் கனிமொழி தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

விபரீத இன்ஸ்டா ரீல் இளைஞர்கள் கைது; போலீசார் எச்சரிக்கை

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
nn

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவைகுளத்தில் விபரீதமாக மண்ணுக்குள் குழிதோண்டி அதனுள் இளைஞரை தலைகீழாக புதைத்து சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்த போலீசார் ரஞ்சித் பாலா அவரது நண்பர்கள் சிவக்குமார், இசக்கி, ராஜா ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.