Skip to main content

கரம் பிடித்தது எப்படி? - வியக்க வைக்கும் திருநம்பியின் காதல் போராட்டம்

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

Marriage of Thirunambi and woman; kobichettypalayam

 

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண்பாஷ். திருநம்பியான இவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அருணாதேவி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்தியாவில் ஆண் - பெண் திருமணம் சட்டப்பூர்வமானது. ஆனால், திருநர் திருமணத்தை சட்டம் ஏற்றுக்கொள்ளாமல் இருந்த நிலையில் தான் 2019 ஆம் ஆண்டு அருண்குமார் - ஸ்ரீஜா என்கிற திருநம்பி - திருநங்கை ஜோடி திருமணம் செய்ததை உயர்நீதிமன்ற மதுரை கிளை அங்கீகரித்தது.

 

மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில் நீதிபதியாக இருந்த சுவாமிநாதன் திருநர் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இதிகாசங்கள், புராணங்களை மேற்கோள் காட்டியதோடு கேரளாவின் சபரிமலை ஐயப்பனையும் சுட்டிக்காட்டிய நீதிபதி சுவாமிநாதன் இந்த தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு திருநம்பி, திருநங்கை உள்ளிட்ட திருநர் மக்களின் திருமணம் சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை உறுதி செய்தது. 

 

இந்த நிலையில், காதலித்து வந்த அருண்பாஷ், அருணாதேவி திருமணம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதற்காக கேரள மாநிலத்துக்கு சென்று அங்குள்ள ஒரு நிறுவனத்திடம் பேசி அங்கு வழக்கறிஞராக உள்ள ஒரு திருநங்கையிடம் உதவி கேட்டுள்ளனர். அவர் மூலமாக ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை பகுதியில் தம்மம் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் பிரியா என்பவரது அறிமுகம் கிடைத்தது. திருநங்கையான பிரியாவிடம் அந்த கேரள வழக்கறிஞர் இந்த தகவலைக் கூறி இருவரையும் அனுப்பியுள்ளார்.

 

அதன் பிறகு திருநங்கை பிரியா மனித உரிமை செயற்பாட்டாளரும் மூத்த வழக்கறிஞரான ப.பா. மோகனை அணுகி அவர் மூலமாக கோபிசெட்டிபாளையத்தில் இயங்கி வரும் மனிதம் சட்ட உரிமை மையத்திற்கு நேரடியாகச் சென்று இந்த காதல் ஜோடியை அறிமுகப்படுத்தி இவர்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். மனிதம் சட்ட மையத்தின் நிறுவனரான வழக்கறிஞர் சென்னியப்பன் மற்றும் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் ஆகியோர் இணைந்து பிப்ரவரி 14 ஆம் தேதி திருநம்பியான அருண் பாஷுக்கும் பெண்ணான அருணாதேவிக்கும் சட்ட முறைப்படி திருமணம் செய்துள்ளனர். இவர்களின் திருமணத்தை பதிவு செய்ய கோபிசெட்டிபாளையம் பதிவாளருக்கு மனு செய்து உள்ளார்கள். 

 

தமிழகத்தில் ஏற்கனவே இதேபோல் ஒரு திருமணம் மதுரை மாவட்டத்தில் நடைபெற்று அதன் மூலமாகத்தான் இந்த தீர்ப்பு வந்துள்ளது. அதன்படி அப்போது திருமணம் செய்தவர்கள் ஒரு திருநம்பி, திருநங்கை. ஆனால், தமிழகத்தில் முதல் முறையாக ஒரு பெண்ணும் திருநம்பியும் திருமணம் செய்தது இதுதான் முதல் முறை. 

 

மனித சமூகத்தில் தன்பால் இனத்தவர்கள், இருபால் இனத்தவர்கள், மூன்றாம் பால் இனத்தவர்கள் என மனித உணர்வுகளை கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். ஆண், பெண் என்ற இருபால் உணர்வு, உறவு என்பதை தாண்டி தன் பால் உணர்வு அதேபோல் இவர்களைப் போன்ற மூன்றாம் பாலினத்தவரான திருநம்பியும் பெண்ணும் திருமணம் என்பது இந்திய அளவில் முதல் முறையில் தற்போது நடைபெற்று உள்ளது. இந்த திருமணத்திற்கு பல்வேறு சிக்கல்கள் அவர்களின் குடும்பத்தினர் மூலமாக வந்திருக்கிறது. இந்த நிலையில் இதை எதிர்கொண்டு இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்த வழக்கறிஞர் ப.பா. மோகன், சென்னியப்பன், தம்மம் பவுண்டேஷன் திருநங்கை பிரியா உட்பட பலரும் ஒரு நம்பிக்கையை இந்த சமூகத்திற்கு விளைவித்துள்ளார்கள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.