Skip to main content

மணமகள் நடனமாடியதால் நின்றுபோன திருமணம்... காவல் நிலையத்தில் புகாரளித்த இருதரப்பினர்

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

Marriage stopped in a dance affair, Both parties reported to the police station

 

பண்ருட்டி அருகே கடந்த 19ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடிய விவகாரத்தில் மணமகன் கன்னத்தில் அறைந்ததால், கோபத்தில் முறைமாமனை திடீரென்று தேர்வு செய்து திருமணம் செய்து கொண்டார் மணமகள். இதையடுத்து, நிச்சயிக்கப்பட்ட மணமகன் வீட்டார் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் திருமணத்திற்காக 7 லட்சம் செலவாகி உள்ளது. எனவே அதனை மணமகள் குடும்பத்தினர் திருப்பித் தரவேண்டும் என்று கூறி புகார் அளித்திருந்தனர்.

 

இந்த நிலையில், மணமகள் அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் மகளிர் காவல் நிலையத்திற்கு நேற்று சென்று பழைய மணமகன் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், 50 பவுன் நகை, 8 லட்சம் மதிப்பில் கார், 6 லட்சம் மதிப்பில் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை வரதட்சணையாக வாங்கிக் கொடுக்கவேண்டுமென்று மணமகனின் தாயார் மற்றும் உறவினர்கள் வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில், மணமகன் விருப்பப்படிதான் வரவேற்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடினேன். ஆனால் மணமகன் தாயார் மற்றும் உறவினர்கள் தூண்டுதலின் பேரில் மணமகன் என் கன்னத்தில் அறைந்து, வரதட்சனை தர மறுத்த காரணத்தை மறைமுகமாகக் காட்டி திருமணத்தை நிறுத்தி விட்டனர்.

 

எனவே மணமகன் குடும்பத்தினர் மீது வரதட்சணை சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டிருந்தார். இரண்டு புகார்களையும் பெற்றுக்கொண்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வள்ளி இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததால் இருதரப்பினரும் நீதிமன்றம் சென்று தீர்வு காணுமாறு முடிவு செய்யப்பட்டு இருதரப்பினரும் கலைந்து சென்றனர். திருமண நிறுத்தம், மணமகன் மாற்றம், இருதரப்பினரின் புகார் ஆகிய சம்பவங்கள் பண்ருட்டி பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மணமகன் வராததால் அண்ணனையே திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
A young girl who married her brother because the groom did not come

மாநில அரசு சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் வராததால், அரசு நிதியுதவியைப் பெறுவதற்காகத் தனது அண்ணனையே ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநில அரசின் சமூக நலத்துறை சார்பில் அவ்வப்போது ஏழை மணமக்களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், திருமணம் செய்யும் மணமக்களுக்கு ரூ. 51,000 மதிப்புள்ள பொருட்கள், ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி அன்று மகராஜ்கஞ்ச் பகுதிக்கு அருகே உள்ள லகிம்பூரில் உத்தரப் பிரதேச மாநில அரசு சார்பில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மணமக்கள் கலந்து கொண்டனர். இதில், திருமணமான பெண்ணான பிரீத்தி யாதவ், அரசு நிதியுதவி பெறுவதற்காகப் பொய்யாக மீண்டும் தனது கணவர் ரமேஷ் யாதவ்வை திருமணம் செய்ய இருந்துள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் ரமேஷ் யாதவ் வரவில்லை.

இந்த நிலையில், அரசு நிதியுதவியைத் தவறவிடக் கூடாது என்று, பிரீத்தி யாதவின் அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்வது போல் நடிக்குமாறு அங்குள்ள தரகர்கள் பிரீத்தி யாதவ்விடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்ட பிரீத்தி யாதவ், தனது அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு நிதியுதவி பெறுவதற்காக பொய்யாகத் திருமணம் செய்துகொண்ட பிரீத்தி யாதவ், ரமேஷ் யாதவ், கிருஷ்ணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.