
திருச்சுழி தாலுகா மானூர் கிராமத்தில் வசித்து வருகிறார் ஞானமுத்து. இவருடைய 2-வது மகன் செல்வம், எதிர்வீட்டில் வசிக்கும் ராஜ்குமாரின் மகளைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதனால், இரு குடும்பத்தினரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 27-ஆம் தேதி இரவு 10-30 மணியளவில், ராஜ்குமாரும் அவருடைய மகன் கவிராஜாவும் ஞானமுத்துவின் வீட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்த பொருட்களை உடைத்துள்ளனர்.
ஞானமுத்துவும் அவருடைய மனைவியும் ராஜ்குமாரிடம் ‘எதற்காக எங்க வீட்டுக்குள்ள வந்து அக்கிரமம் பண்ணுறீங்க?’ என்று கேட்டதற்கு, ‘என் மகளை உன் மகன் கூட்டிட்டு போயிட்டான். நீங்க மட்டும் எப்படி நிம்மதியா இருக்கலாம்?’ எனத் திட்டி கம்பால் தாக்கியிருக்கின்றனர்.
தனக்கு ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக ஞானமுத்து அனுமதிக்கப்பட்டுள்ளார். நரிக்குடி காவல்நிலையம் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறது.