தமிழக அரசின் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் கீழ் +2 படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கம் 50,000 பணமும், பட்டம் படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் 50,000 உதவித்தொகை அரசு வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை கேட்டு கடலூர் மாவட்டத்தில் மட்டும் 2015-16 ஆம் ஆண்டில் விண்ணப்பித்த 425 விண்ணப்பதாரர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை.
இதற்கான காரணத்தை மாவட்ட சமூக நலத்துறை சேர்ந்த அதிகாரிகள் கம்ப்யூட்டர் மயமாக்கல் பணியின்போது கடலூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி பகுதியில் இருந்து திருமண உதவி கேட்டு விண்ணப்பித்த 425 விண்ணப்பதாரர்கள் விடுபட்டு உள்ளனர். அதனால் அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக உதவித்தொகை கேட்டு மனு செய்த பெற்றோர்கள் சமூகநலத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்தும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் அதிகாரிகள் உதவித்தொகை கிடைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
சட்டசபை தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் நிவாரணம் கிடைக்காதவர்களை ஒன்றிணைத்து போராடும் நிலையில் உள்ளனர். விடுபட்ட 425 பெண்களுக்கு திருமண உதவித்தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதோடு அதன் பிறகு 2018 - 2019 - 2020ம் ஆண்டுகளில் திருமண உதவித்தொகை விண்ணப்பித்தவர்களுக்கும் இதுவரை திருமண உதவித்தொகை வழங்கப்படவில்லை, வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் தமிழக அரசு திருமண உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் பெற்றோர்களுக்கு உதவித்தொகை கிடைக்க செய்ய வேண்டும், அப்படி செய்யாவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் உதவித்தொகை கேட்டு காத்திருக்கும் பெற்றோர்கள் உறவினர்கள் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் நிலை உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?