Skip to main content

10ஆம் தேதி போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

Published on 05/03/2018 | Edited on 05/03/2018
Ramadoss


 

முதுநிலை மருத்துவப் படிப்பில் தொடரும் சமூக அநீதியை கண்டித்து 10-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு தொடர்ந்து சமூக அநீதியை இழைத்து வருகிறது. ஒருபுறம் அனைத்திந்திய தொகுப்பு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட  வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அளவிலான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டும் மறுக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை சமூக அநீதி கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.


தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 50% அரசு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் இரு ஆண்டுகள் பணியாற்றிய மருத்துவர்களுக்கும், மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இது மிகச்சிறந்த ஏற்பாடு ஆகும். இந்த ஏற்பாட்டின் காரணமாகவே மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து கிராமப்புறங்களிலும், தொலைதூரங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இதனால் தான் ஊரகப் பகுதிகளில் வலிமையான மருத்துவக்கட்டமைப்பை ஏற்படுத்த முடிந்துள்ளது. இது தமிழகத்தின் சிறப்பாகும்.


ஆனால், இதை சிதைக்கும் வகையில் வகையில் கடந்த ஆண்டு புதிய விதிமுறைகளை இந்திய மருத்துவக்குழு வகுத்தது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான மாணவர் சேர்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவக்குழுவின் விதியால் தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. அதற்கு மாற்றாக தொலைதூரப்பகுதிகளிலும், கடினமான பகுதிகளிலும் தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இம்முறையை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகத்தின்  மேலாண் இயக்குனர் உமாநாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. ஆனால், இந்தப் பரிந்துரைகளை ஏற்க மறுத்துவிட்ட அரசு பணியில் இல்லாத மருத்துவர்கள், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக அறிவித்துள்ளனர். அவ்வாறு வழக்குத் தொடரப்பட்டால் அரசு மருத்துவர்களுக்கு ஓரளவாவது சமூக நீதி கிடைக்க வகை செய்யும் ஊக்க மதிப்பெண் முறைக்கும் ஆபத்து ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.


ஊக்க மதிப்பெண் என்ற அரைகுறை ஏற்பாடு எந்த வகையிலும் முழுமையான சமூக நீதியை உறுதி செய்யாது என்பதால் தான் அரசு மருத்துவர்களும் தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தச் சிக்கல் குறித்து மற்ற மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவர் சங்கங்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இதை நாடு தழுவிய விவகாரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம், நிலைப்பாடு, முயற்சிகள் ஆகிய அனைத்தும் நியாயமானவை.


மருத்துவப் பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசால் கட்டமைக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகள் அரசு மருத்துவமனைக்கான மருத்துவர்களை உருவாக்கும் நாற்றாங்கால்களாகத் தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், இதில் தமிழக ஆட்சியாளர்கள்அலட்சியம் காட்டியதால் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும். இந்த விஷயத்தில் நீதிமன்றங்களில் நீதி கிடைக்காத நிலையில், நாடாளுமன்றத்தில் உரிய சட்டத் திருத்தத்தின் மூலம் அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று ஓராண்டாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் போதிலும் அதை மத்திய அரசும் செய்யவில்லை; மாநில அரசும் வலியுறுத்தவில்லை. இவ்வாறாக  அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசும், தமிழக அரசும் போட்டிப் போட்டு துரோகம் இழைத்துள்ளன.


மற்றொருபுறம் மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட  வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த அநீதிகளை சரி செய்யும் வகையில் அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உடனடியாக 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதேபோல், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மேற்படிப்புக்கான இடங்களில் 50 விழுக்காடு அரசு மருத்துவர்களுக்கு  ஒதுக்கப்பட வேண்டும். இந்த இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தி பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பில் 10.03.2018 சனிக்கிழமையன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


பாட்டாளி மாணவர் சங்கத்தின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வழிகாட்டுதலில் பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி தலைமையிலும், மாணவர் சங்க செயலாளர்கள் வழக்கறிஞர் கடலூர் கோபிநாத், வழக்கறிஞர் சேலம் விஜயராஜா, அரூர் முரளிசங்கர், வேலூர் பிரபு ஆகியோர் முன்னிலையிலும் இப்போராட்டம் நடைபெறும். இதில் பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக நீதி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.