Skip to main content

‘மாபெரும் 7 தமிழ்க்கனவு’- தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்!

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Maperum 7 Tamilkanavu Tamil Nadu budget tabled today

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவையின் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றே குறைந்தவர்கள் அல்ல... ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தார்.

இதனையடுத்து இரண்டாவது நாளாக கடந்த 13 ஆம் தேதி சட்டப்பேரவை கூடியபோது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன், புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ். பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் எம். பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். இராஜேந்திரன், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்து வருகின்றனர்.

Maperum 7 Tamilkanavu Tamil Nadu budget tabled today

இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்ய இருக்கிறார். புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாக மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன. நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும். நாளை வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண் நிதிநிலை அறிக்கை விவாதம் இன்றி நிறைவேற்றப்படுகிறது. பொது நிதிநிலை அறிக்கையின் மீது விவாதம் 21 ஆம் தேதி காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நடைபெற உள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி நிதி அமைச்சரின் பதிலுரையுடன் சட்டமன்ற கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது. 

முன்னதாக தமிழ்நாடு பட்ஜெட் முத்திரைச் சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. இதனையடுத்து இன்று தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இடம் பெறப்போகும் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில், ‘சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோ சொன்ன குட்டி ஸ்டோரி; விருதுநகர் நிகழ்ச்சியில் நடந்த சுவாரசியம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 The short story told by Durai Vaiko; the minister answered on the stage!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அமைந்துள்ளது விஸ்வநத்தம் கிராமம். இப்பகுதியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் குப்பை மேடாகப் பயனற்று நில மாசுபாட்டை ஏற்படுத்தி வந்தது. இதையறிந்த விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், குப்பை மேடாகப் பயனற்றுக் கிடந்த அரசு நிலத்தை மீட்டு குறுங்காடு அமைக்கத் திட்டமிட்டனர். விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அன்றாடம் வேலை செய்யும் எளிமையான பின்னணியைச் சேர்ந்தவர்கள். ஆனால், அந்த அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கு எப்படி அரசிடம் அனுமதி கேட்டு பணிகளைத் துவங்க வேண்டும் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்துள்ளது. 

இந்த நிலையில் தான், விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் பணியைப் பார்த்து பாராட்டிவிட்டு தனிப்பட்ட செல்போன் எண்ணை கொடுத்துவிட்டுச் சென்ற மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோவின் ஞாபகம் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கு வந்துள்ளது. உடனே அவர்கள் செல்போனில் தகவல் தெரிவித்து குறுங்காடுகள் அமைக்க உதவி கேட்க, பணிகள் தொடங்க அனைத்து உதவிகளையும் துரை வைகோ ஃபோன் மூலமே செய்து கொடுத்துள்ளார். செல்போனில் குறுங்காடு அமைக்கும் குழுவினரிடம் நம்பிக்கை தெரிவித்த துரை வைகோ, உடனே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு தகவல் கொடுக்க அமைச்சரும் தமிழக அரசு சார்பில் தேவையான நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து, குறுங்காடு அமைக்கும் இடத்தை பார்வையிட்டு ஊராட்சி தலைவரிடம் பேசி குப்பைகள், சீமைக்கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்தார். 

இந்த கூட்டு முயற்சியால் முதற்கட்டமாக விஸ்வநத்தம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் துரை வைகோ ஏற்பாட்டின் பேரில் குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக மரக் கன்றுகளை நட்டு நிகழ்வினை சிறப்பு விருந்தினர்கள் தொடங்கி வைத்தனர். நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையினை அமைச்சர்களிடம் பெற்று விஸ்வவனம் அறக்கட்டளையிடம் துரை வைகோ ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து, இந்த திட்டச் செயலாக்கத்திற்காக துரை வைகோவையும் தொடர்புடைய நிர்வாகிகளையும் அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினர். நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக குறுங்காட்டிற்கு 14 மாதங்களாக துரை வைகோ மேற்கொண்ட  முயற்சிகள் 7 நிமிட குறும்படமாக LED திரையில் திரையிடப்பட்டது.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய  துரை வைகோ, 'விதைப்பது ஒரு முறை வாழட்டும் தலைமுறை' குறுங்காடு திட்டத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, குறுங்காட்டில் 30க்கும் மேற்பட்ட நாட்டு மரங்கள் நட இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 14 மாதங்களில் தான் கொடுத்த வாக்கை செய்து காட்டிய பின்னணியை தனது கட்சியின் தலைவரும் தந்தையுமான வைகோவை முன்னிறுத்தி திருக்குறளுடன் ஒப்பிட்டுப் பேசினார். மேடையில், அண்ணன் தங்கம் தென்னரசு என அழைத்து, இருவருக்கும் 2 தலைமுறையாக இருக்கும் உறவு பந்தத்தை எடுத்துக்காட்டி பேசினார். தொடர்ந்து பேசியவர், ''நான் நல்லா இருக்கணும் என எப்போதும் நினைக்கிறது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், அமைச்சர் தங்கம் தென்னரசு..'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தொடர்ந்து உணர்வுப்பூர்வமாக பேசிய  துரை வைகோ, குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார். அதில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் நிகழ்ச்சிக்கு நேரம் வாங்க சென்றதாகவும், அப்போது அன்புடன் பேசிய அமைச்சர், ''உங்க அப்பா தான் புலி புலினு இருந்தார்னா.. நீ மரம் செடி கொடின்னு இருக்கியே.. சீட்டு வாங்கி அரசியல் வேலை பாரு..'' என அன்புடன் கடிந்துகொண்டதாகவும், அதற்கு ''நான் இல்லாத காலத்திலும் இதை அமைத்துத் தந்தவன் வைகோ மகன். அவனது கட்சி என்பார்கள். அதுவே போதும். இந்த 32 ஏக்கர் குறுங்காடு எனது சின்ன உதவி..'' என சொல்லியதாக எல்லோர் மத்தியிலும் இருவருக்குள் நடந்த நிகழ்வை கூறினார். 

நிகழ்வில் இருந்த பத்திரிகையாளர்களை குறிப்பிட்டு பேசியவர், ''தான் அரசியலில் போட்டியிட இங்கு வரவில்லை..'' எனத் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து தனது உரையின் முடிவில் பேசியவர், தமிழக அரசின் பசுமைத் திட்டம் பற்றியும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் விஸ்வ வனம் அமைப்பை பற்றியும் பெருமிதத்துடன் பேசினார். இறுதி வரியாக, ''உங்களுக்கு ஊர் பிடிக்கலன்னா வேற ஊர் போய்டலாம். மாநிலம், நாடு புடிக்கலன்னா வேற இடம் போயிடலாம். ஆனா நம்ம பூமித்தாய விட்டு நம்ம எங்கேயும் போக முடியாது. ஒன்று சேர்ந்து பூமியை பாதுகாப்போம்..'' என சூளுரைத்து தனது உரையை துரை வைகோ முடித்துக்கொண்டார்.

இதையடுத்து, பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "துரை வைகோவை அரசியலுக்கு கொண்டு வந்து கெடுத்தது நான் தான். அவர் தற்போது அரசியல் முழு நேர ஊழியர் ஆகிவிட்டார். வைகோவிடம், `உங்களுக்கு பின்பு இந்தக் கட்சியை வழி நடத்த ஒரு ஆள் தேவை. அதற்கு துரை வைகோ பொருத்தமானவர். அவரை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்..’ எனக் கூறி அரசியலுக்கு சம்மதம் தெரிவிக்க வைத்ததாக நெகிழ்ச்சியுடன் பேசினார். தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பாராட்டி பேசினார். இதில் மதிமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ ஏற்பாட்டின் பேரில் குறுங்காடுகள் அமைப்பதற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Next Story

குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்த அமைச்சர்கள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Ministers who started the event of setting up small shops

சிவகாசி விஸ்வநத்தம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் குப்பை மேடாக காட்சி அளித்தது. இதனை ஆட்டோ ஓட்டுநர்கள், அன்றாடம் வேலை செய்யும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பசுமை ஆர்வலர்கள் இணைந்து விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். இவர்கள் அந்த இடத்தை தூய்மைப்படுத்தி பசுமைக் காடுகள் அமைக்க திட்டமிட்டனர். இவர்களுக்கு உதவ முன்வந்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, இடத்தைப் பார்வையிட்டு ஊராட்சித் தலைவரிடம் பேசி குப்பைகள், சீமைக்கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்ததோடு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவையும் பலமுறை சந்தித்துப் பேசி நிலைமையை விளக்கிச் சொன்னார்.

அதைத் தொடர்ந்து குறுங்காடுகள் அடர்வனம் அமைக்க அறக்கட்டளைக்கு அனுமதி அளித்து அமைச்சர் சேகர்பாபு ஆணை வெளியிட்டார். இன்று காலை 10.30 மணிக்கு முதற்கட்டமாக 7 ஏக்கர் இடத்தில் குறுங்காடுகள் அடர்வனம் அமைக்கும் நிகழ்வு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு நிகழ்வினை தொடங்கி வைத்து உரையாற்றினர். இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையினை அமைச்சர்களிடம் பெற்று விஸ்வவனம் அறக்கட்டளையிடம் துரை வைகோ ஒப்படைத்தார். இந்த திட்டச் செயலாக்கத்திற்காக துரை வைகோவையும் தொடர்புடைய நிர்வாகிகளையும் அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

இந்நிகழ்ச்சியில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் தி.மு. இராசேந்திரன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி. சதன் திருமலைக்குமார், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர்கள் சாத்தூர் கண்ணன், பா.வேல்முருகன், ஆர்.எஸ். இரமேஷ், இல.சுதா பாலசுப்பிரமணியன், முனியசாமி பசும்பொன் மனோகரன், மார நாடு, ஜெயராமன், வி.கே.சுரேஷ், மதிமுக சட்டத்துறை செயலாளர் சூரி நந்தகுமார், சிவகாசி மேயர் சங்கீதா, இன்பம் ஒன்றியச் சேர்மன் விவேகன்ராஜ், ஊராட்சி தலைவர் ஏ.எல். நாகராஜன், ஒன்றியக் குழு உறுப்பினர் கணேசன், விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டக் கழக முன்னணி நிர்வாகிகள், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர 14 மாதங்களாக துரை வைகோ மேற்கொண்ட முயற்சிகள் 7 நிமிட குறும்படமாக அரங்கில் அமைக்கப்பட்ட திரையில் திரையிடப்பட்டது. துரை வைகோவின் முயற்சிகளையும் பூமித்தாயை காப்பதில் துரை வைகோ கொண்டிருக்கும் அக்கறையையும் துல்லியமாக குறும்படம் எடுத்துரைத்து பார்வையாளர்களை கவர்ந்தது. அமைச்சர்கள் தங்களது பேச்சில் அதனை உள் வாங்கி துரை வைகோவை பாராட்டினர்.