Skip to main content

காப்பீட்டு தொகை வழங்குவதில் மோசடி... ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

காவிரி டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 564 வருவாய் கிராமங்களில் 164 வருவாய் கிராமங்களுக்கு இழப்பீடு மறுக்கப்பட்டுள்ளதை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் விளமல் பாலத்திலிருந்து பேரணியாக சென்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்டா மாவட்டங்களை உலுக்கிய கஜா புயலால் விவசாயம் முற்றிலும் முடங்கியது. அப்போது பயிர் காப்பீடு செய்திருந்த விவசாயிகளுக்கு, தற்பொது காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை புறக்கணித்து விட்டதாகக் கூறி விவசாயிகள் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
 

MANY FARMERS NOT GET KISAN INSURANCE FARMERS STRIKEAT TIRUVARUR


அதை தொடர்ந்து திருவாரூரில் நேற்று (10/10/2019) விளமல் பாலத்தில் இருந்து பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை கண்ட காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலை பூட்டி இரண்டடுக்கு தடுப்பு அரண் அமைத்து அலுவலகத்தில் நுழைய விடாமல் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் அங்கேயே அமர்ந்து சுமார் 2 மணி நேரம் முழுக்கமிட்டவாறே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

MANY FARMERS NOT GET KISAN INSURANCE FARMERS STRIKEAT TIRUVARUR



மாவட்ட ஆட்சியர், திருவாரூர் ஆர்டிஓ, தாசில்தார், டிஎஸ்பி உள்ளிட்டோர் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட ஆட்சியரோடு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
 

MANY FARMERS NOT GET KISAN INSURANCE FARMERS STRIKEAT TIRUVARUR



அதன்படி விடுபட்டுள்ள அனைத்து கிராமத்திலும் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தருவதற்கும், குறைவான இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை கஜா புயல் பேரிடராக கருதி, அனைத்து கிராமங்களுக்கும் முழு இழப்பீடு பெற்று தருவதற்கும், அறுவடை ஆய்வறிக்கைகளில் தவறுகள் ஏதேனும் நடைப்பெற்றிருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்து உரிய இழப்பீடு கிடைப்பதற்கு, அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதோடு தவறுகள் நடைப்பெற்றது உண்மையெனில் மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என உறுதியளிக்கப்பட்டது.
 

மேலும் உழவு மானியம், மானிய விலையில் விதை உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்குவது குறித்து பயனாளிகளின் பட்டியல்கள் கிராமந்தோறும் வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனை எற்றுக்கொண்ட விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர். 
 

MANY FARMERS NOT GET KISAN INSURANCE FARMERS STRIKEAT TIRUVARUR


 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.