Skip to main content

நக்கீரன் பத்திரிகையின் வாயை மூடுவதற்கு முயற்சி செய்கிறார்கள்: மனுஷ்யபுத்திரன்

Published on 10/10/2018 | Edited on 10/10/2018
Manushyaputhiran



நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டதற்கு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், 
 

கவர்னர் அலுவலகம் நக்கீரன் பத்திரிகையை பார்த்தும், நக்கீரன் ஆசிரியரை பார்த்தும் பயப்பட ஆரம்பித்துவிட்டது என்பதினுடைய அடையாளம்தான் இந்த கைது. 
 

நிச்சயமாக இந்த கைது என்பது, அவர்கள் எதையோ மறைக்க முயற்சிக்கிறார்கள். நக்கீரன் அதனை வெளிக்கொண்டுவந்துவிடுமோ என்ற அச்சத்தில் அடிப்படையில்தான் இதனை செய்துகொண்டிருக்கிறார்கள். 
 

ஒரு பத்திரிகை வெளியிட்ட ஒரு செய்திக்காக அந்த பத்திரிகையின் ஆசிரியரை நேரடியாக கைது செய்வது, அதுமட்டுமல்ல தேச துரோக வழக்கில் கைது செய்வது என்பது இங்கு எவ்வளவு பெரிய பாசிச ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. 
 

கவர்னர் மீது இருக்கக்கூடிய குற்றச்சாட்டு, அந்த குற்றச்சாட்டிற்கு கவர்னரே விசாரிக்க உத்தரவிட்டு அதுபற்றிய விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்கிறபோது நக்கீரன் கோபால் அவர்களை கேள்வி கேட்பதற்கான உரிமை அந்த விசாரணை ஆணையத்திற்குத்தான் இருக்கிறது. 
 

அவர்கள் அதிகபட்சமாக போனால் நக்கீரன் ஆசிரியரை அழைத்து எந்த அடிப்படையில் இந்த செய்தியை வெளியிட்டீர்கள் என்று கேட்கலாம். அதற்கு பதிலாக இவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்கிறார்கள் என்று சொன்னால் நக்கீரன் ஆசிரியரின் வாயை மூடுவதற்கு இவர்கள் முயற்சி செய்கிறார்கள். நக்கீரன் பத்திரிகையின் வாயை மூடுவதற்கு அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இவர்கள் மறைக்க முயன்ற உண்மைகளை நக்கீரன் ஆசிரியர் வெளிப்படுத்திவிடுவாரோ என்று அவரை அச்சுறுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள்.

 
ஆனால் நக்கீரன் கோபால் அவர்கள் ஊடகத்துறையின் ஒரு போராளி. அவர் சந்திக்காத பிரச்சனைகளா, சவால்களா, எத்தனை எத்தனை வழக்குகள் அவர் மீது போடப்பட்டிருக்கின்றன. அத்தனையிலும் வென்று வெளியே வந்தவர் அவர். அதுமட்டுமல்ல நக்கீரன் பொய் செய்தி வெளியிட்டது, தவறான செய்தியை வெளியிட்டது என்று எந்த வழக்கிலாவது தண்டிக்கப்பட்டிருக்கிறதா? ஆதாரம் இல்லாத எந்த செய்தியையும், பின்புலம் இல்லாத எந்த செய்தியையும் நக்கீரன் வெளியிட்டது கிடையாது. 
 

மிகப்பெரிய அராஜகங்களையெல்லாம் எதிர்த்து வெற்றிப்பெற்று வந்தவர் நக்கீரன் கோபால் அவர்கள். நிச்சயமாக இந்த அராஜகத்தையும் எதிர்த்து அவர் வெற்றி பெறுவார். 
 

ஊடகத்துறை அனைத்தும் ஒட்டுமொத்தமாக நக்கீரன் ஆசிரியரோடு இணைந்து நிற்க வேண்டும். ஏனென்றால் இது நக்கீரன் ஆசியருக்கு எதிராக செய்யப்பட்ட ஒரு கைது அல்ல. ஒட்டுமொத்த ஊடகத்துறையும் இதன் மூலம் மிரட்டப்பட்டிருக்கிறது. 
 

எங்களுக்கு எதிராக செய்தி வெளியிடாதே, எங்களை விமர்சிக்காதே, விமர்சித்தால் கைது செய்வோம் என்று. கவர்னர் என்ன கடவுளா? கவர்னர் என்ன அரசரா? அவரை கேள்வி கேட்டால் தேசிய பாதுகாப்பிற்கு எதிரான ஒரு விஷயமா? இந்த சட்டப்பிரிவு என்பதே, எவ்வளவு தூரம் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். 
 

ஒட்டுமொத்த ஊடகத்துறையினரும், சிந்தனையாளர்களும் இதன் மூலம் மிரட்டப்பட்டிருக்கிறார்கள். இந்த கைது கருத்து சுதந்திரத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் விடப்பட்டிருக்கும் ஒரு சவால். ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுதிரண்டு எதிர்க்க வேண்டும் என்றார்.
 

 


 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஜாபர் சாதிக் கைது'- போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
 'Jaber Sadiq Arrested'-Narcotics Unit in action

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.  

தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில் அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு இந்த கைது தொடர்பாக இன்று பிற்பகல் விளக்கமளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

Next Story

கோவில் படையல் மதுவில் விஷம்; பூசாரி கைது

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Poison in Temple Guard Wine; Priest arrested

கோவிலில் சாமிக்கு படையலில் வைக்கப்பட்ட மதுவை குடித்த ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் கோயில் பூசாரி கைது செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகர்கோவில் வடலிவிளை பகுதிகளில் அமைந்துள்ளது ஸ்ரீ சுடலைமாடசாமி திருக்கோயில். இந்த கோவிலில், கோவில் கணக்கு தொடர்பாக நிர்வாகிகளுக்கும், அருள் என்ற நபருக்கும் இடையே மோதல்போக்கு இருந்தது வந்துள்ளது. கோவில் கணக்கை அவ்வப்போது கேட்டு அருள் என்பவர் கோவில் நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி சுடலைமாட சாமி கோவிலில் வைக்கப்பட்ட படையலில், மது வைக்கப்பட்டது. அந்த மது தனக்கு தான் வேண்டும் என அருள் பிரச்சனை செய்துள்ளார். அப்பொழுது கோவில் பூசாரி சதீஷ் ஏற்கெனவே அவர்களுக்குள் இருக்கும் முன் விரோதத்தை மனதில் வைத்து படையல் மதுவில் விஷத்தை கலந்து வைத்துள்ளார். ஆனால், அதை அருள் குடிப்பதற்கு முன்பாக செல்வகுமார் என்பவர் தெரியாமல் குடித்துள்ளார். இதில் செல்வகுமார் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

செல்வகுமாரின் உயிரிழப்பு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில், கோவில் படையலில் வைக்கப்பட்ட மதுவில் விஷம் கலக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கோவில் பூசாரி சதீஷை போலீசார் கைது செய்துள்ளனர்.