ADVERTISEMENT

ஆணவக்கொலை; பெற்ற மகளைக் கொன்ற தாய்

10:23 PM Nov 24, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மகள் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த வாலிபரைக் காதலித்தார் என்கிற ஆத்திரத்தில் தாயே ஆணவக் கொலை செய்திருக்கிறார். பாளை பகுதியின் சீவலப்பேரியை ஒட்டியுள்ள பாலாமடையைச் சேர்ந்தவர் பேச்சி. சென்னையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி ஆறுமுகக்கனி. இவர்களின் மகள் அருணா(வயது 19) கோவையில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தவர் அங்கேயே வேலையும் பார்த்து வந்திருக்கிறார். மகளின் படிப்பு, பிற தேவைகளைப் பெற்ற தாயான ஆறுமுகக்கனியே தன் சுயவேலையில் கிடைக்கும் கூலியைக் கொண்டு கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி பெற்ற கடமையைச் செய்திருக்கிறார்.

இதனிடையே கோவையில் வேலை பார்த்த அருணா அங்கு வேலைப் பார்த்து வந்த பாலாமடையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைக் காதலித்திருக்கிறார். இவர்களின் காதல் நீடித்திருக்கிறது. இந்த விஷயம் அரசல் புரசலாகத் தாய் ஆறுமுக்கனிக்கும் தெரிய வந்திருக்கிறது. அதே சமயம் வாலிபர் வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் தாய் கடுமையாக எதிர்த்திருக்கிறார். வேண்டாம் இந்தக் காதல் என்ற பெற்றோர், அருணாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்கு சம்மதிக்காத மகளோ காதலை விடுவதாகத் தெரியவில்லை. அந்த வாலிபரையே திருமணம் செய்வேன் என்று அருணா உறுதியாகத் தெரிவித்து விட்டாராம்.

இந்தச் சூழலில் கோவையிலிருந்த மகளை வீட்டிற்குக் கூட்டி வந்திருக்கிறார் தாய் ஆறுமுகக்கனி. அப்போது கூட மகளிடம் எடுத்துச் சொன்னபோது தாய்க்கும் மகளுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. என் பேச்சைக் கேட்காமல் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்வேன்னு பிடிவாதமாக இருக்கிறாளே என ஆத்திரத்திலிருந்த தாய் ஆறுமுகக்கனி, நேற்று முன்தினம் அருணாவை அவளது தோளில் கிடந்த துப்பட்டாவால் பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் அவளது கழுத்தைச் சுற்றி இறுக்கிக் கதறக் கதற நெரித்துக் கொலை செய்திருக்கிறார். அதன் பின் மாத்திரைகள், ஹேர் டையையும் எடுத்துச் சாப்பிட்ட தாய் தானும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

தகவலறிந்த சீவலப்பேரி போலீசார் சம்பவ இடம் வந்தவர்கள் அருணாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர்கள் தாயைப் பிடித்து விசாரணை நடத்தினர். இவர்களிடம் நடந்தவற்றைத் தெரிவித்து ஒப்புக்கொண்ட தாய், தானும் அளவுக்கதிகமான மாத்திரை ஹேர்டை குடித்ததாகச் சொல்ல உடனே அவரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு செய்த சீவலப்பேரி இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மேல் விசாரணை நடத்தி வருகிறார். பெற்ற தாயே ஆணவக் கொலையில் ஈடுபட்டது பாளை பகுதியைப் பரபரப்பாக்கி இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT