Skip to main content

ஆணவக்கொலை; பெற்ற மகளைக் கொன்ற தாய்

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

Manslaughter; A mother issue her daughter

 

மகள் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த வாலிபரைக் காதலித்தார் என்கிற ஆத்திரத்தில் தாயே ஆணவக் கொலை செய்திருக்கிறார். பாளை பகுதியின் சீவலப்பேரியை ஒட்டியுள்ள பாலாமடையைச் சேர்ந்தவர் பேச்சி. சென்னையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி ஆறுமுகக்கனி. இவர்களின் மகள் அருணா(வயது 19) கோவையில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தவர் அங்கேயே வேலையும் பார்த்து வந்திருக்கிறார். மகளின் படிப்பு, பிற தேவைகளைப் பெற்ற தாயான ஆறுமுகக்கனியே தன் சுயவேலையில் கிடைக்கும் கூலியைக் கொண்டு கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி பெற்ற கடமையைச் செய்திருக்கிறார்.

 

இதனிடையே கோவையில் வேலை பார்த்த அருணா அங்கு வேலைப் பார்த்து வந்த பாலாமடையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைக் காதலித்திருக்கிறார். இவர்களின் காதல் நீடித்திருக்கிறது. இந்த விஷயம் அரசல் புரசலாகத் தாய் ஆறுமுக்கனிக்கும் தெரிய வந்திருக்கிறது. அதே சமயம் வாலிபர் வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் தாய் கடுமையாக எதிர்த்திருக்கிறார். வேண்டாம் இந்தக் காதல் என்ற பெற்றோர், அருணாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்கு சம்மதிக்காத மகளோ காதலை விடுவதாகத் தெரியவில்லை. அந்த வாலிபரையே திருமணம் செய்வேன் என்று அருணா உறுதியாகத் தெரிவித்து விட்டாராம்.

 

இந்தச் சூழலில் கோவையிலிருந்த மகளை வீட்டிற்குக் கூட்டி வந்திருக்கிறார் தாய் ஆறுமுகக்கனி. அப்போது கூட  மகளிடம் எடுத்துச் சொன்னபோது தாய்க்கும் மகளுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. என் பேச்சைக் கேட்காமல் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்வேன்னு பிடிவாதமாக இருக்கிறாளே என ஆத்திரத்திலிருந்த தாய் ஆறுமுகக்கனி, நேற்று முன்தினம் அருணாவை அவளது தோளில் கிடந்த துப்பட்டாவால் பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் அவளது கழுத்தைச் சுற்றி இறுக்கிக் கதறக் கதற நெரித்துக் கொலை செய்திருக்கிறார். அதன் பின் மாத்திரைகள், ஹேர் டையையும் எடுத்துச் சாப்பிட்ட தாய் தானும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

 

தகவலறிந்த சீவலப்பேரி போலீசார் சம்பவ இடம் வந்தவர்கள் அருணாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர்கள் தாயைப் பிடித்து விசாரணை நடத்தினர். இவர்களிடம் நடந்தவற்றைத் தெரிவித்து ஒப்புக்கொண்ட தாய், தானும் அளவுக்கதிகமான மாத்திரை ஹேர்டை குடித்ததாகச் சொல்ல உடனே அவரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

வழக்குப்பதிவு செய்த சீவலப்பேரி இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மேல் விசாரணை நடத்தி வருகிறார். பெற்ற தாயே ஆணவக் கொலையில் ஈடுபட்டது பாளை பகுதியைப் பரபரப்பாக்கி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.