Skip to main content

காதல் மனைவியை குடும்பமே சேர்ந்து செய்த ஆணவக் கொலை; கணவர் உள்ளிட்ட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
 Manslaughter with family of love wife; 4 people including husband get double life sentence

கடலூர் மாவட்டம் மேல் புவனகிரியைச் சேர்ந்தவர் பஞ்சநாதன். இவர் கடந்த 2014 ஜூலை 8 ஆம் தேதி புவனகிரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில், ‘பெருமாத்தூர் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் கடை வைத்து வாட்டர் கேன் வியாபாரம் செய்து வந்த தனது மகள் சீதாவை (28) காணவில்லை’ என்று கூறியிருந்தார். புகாரின் பேரில் அப்போதைய காவல் ஆய்வாளர் ரமேஷ் ராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சீதாவுக்கும் சிதம்பரத்தைச் சேர்ந்த அரச கிருஷ்ணன் மகன் சரவணன் (36) என்பவருக்கும் பதிவுத் திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சரவணனை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 15.7.2014 அன்று சரவணன், பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் கடந்த 16.7.2014 அன்று சரவணனின் அக்கா சகுந்தலாவின் கணவர் வெங்கடேசன் என்பவர், மேல்புவனகிரி கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவனிடம் ஆஜராகினார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில், ''காணாமல் போன சீதாவை 16.6.2014 ஆம் தேதி என் மைத்துனர் சரவணன் இருசக்கர வாகனத்தில், தான் வாட்ச்மேனாக வேலை செய்யும் சிதம்பரம் அம்மாபேட்டை பைபாஸ் ரோட்டில் உள்ள அட்சயா கார்டனுக்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் சீதாவை தனிக்குடித்தனம் வைப்பதாகக் கூறி தன் வீட்டிலேயே தங்க வைத்தார்.

பின்னர் தானும் தன் மைத்துனர் சரவணன், மாமியார் செல்வி, மனைவி சகுந்தலா ஆகியோர், 'சீதா பட்டியலின பெண். நாம் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் எனவே அவரை உயிருடன் விடக்கூடாது எனக் கொலை செய்து பிணத்தை எரித்து விட வேண்டும் என முடிவெடுத்து, கடந்த 17.6.2014 ஆம் தேதி சீதா வீட்டில் படுத்திருந்தபோது, என் மனைவியையும் என் மாமியாரையும் வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு நானும் சரவணனும் வீட்டிற்குள் போய் சரவணன் சீதாவின் கழுத்தை பிடித்து நெறித்தார். நான் கட்டையால் சீதாவின் தலையில் அடித்தேன். இதில் சீதா இறந்துவிட்டார்.

 Manslaughter with family of love wife; 4 people including husband get double life sentence

அதன் பின்னர் டீசலும், சர்க்கரையும் வாங்கி வந்து கார்டனுக்கு உள்ளேயே உள்ள பள்ளத்திற்கு அருகில் எடுத்துச் சென்று சீதாவின் பிணத்தை எரித்தோம். பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள் என்று சரவணன் சொன்னதால், நானும் என் மனைவி, என் மாமியார் 3 பேரும் அங்கிருந்து வந்துவிட்டோம்'' என வாக்குமூலம் அளித்ததாகக் கூறியுள்ளார். அதன் பேரில் வெங்கடேசன், சகுந்தலா, செல்வி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று பாதி எரிந்த நிலையில் சீதாவின் உடல் எலும்புகளை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி தடயவியல் வல்லுநர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

இவர்கள் மீது கடலூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்து திங்கள் கிழமை (19/02/2024) இந்த வழக்கில் நீதிபதி உத்தமராஜ் தீர்ப்பில், ‘சரவணன், வெங்கடேசன், செல்வி, சகுந்தலா ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நான்கு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் சரவணன், வெங்கடேசன் ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதமும், செல்வி, சகுந்தலா ஆகியோருக்கு தலா ரூ. 20,000 அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் வனராசு ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கில் நேரில் கண்ட சாட்சிகள் இல்லாத நிலையில், தொடர்ச்சியான சம்பவங்களையும் தக்க சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில், புலன் விசாரணை மேற்கொண்டு குற்றத்தை நிரூபித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக இருந்தவர், அப்போதைய சிதம்பரம் டிஎஸ்பியாக, தற்போது கடலூர் மாவட்ட எஸ்பியாக இருக்கும் ராஜாராம் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.