Skip to main content

தற்காலிக பெண் ஊழியர்கள் அடுத்தடுத்து தற்கொலை முயற்சி; மன்னார்குடியில் பரபரப்பு

Published on 02/10/2020 | Edited on 02/10/2020

 

mannarkudi municipal women issue

 

மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிவரும் தற்காலிக பெண் ஊழியர்கள் ஒவ்வொருவராக மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாமணி கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தா. இவர் கடந்த 9  ஆண்டுகளாக கர்ணாவூர் ஊராட்சியின்  ஊக்குவிப்பாளராக  பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 2017-2019ம் ஆண்டிற்கான பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கர்ணாவூர் ஊராட்சியில் 274  வீடுகள் மற்றும் 890 கழிப்பறைகள் கட்டாமலேயே கட்டியதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது என புகார் எழுந்ததை தொடர்ந்து அலுவலக மேலாளராக பணியாற்றி வரும் ராஜா, உதவி பொறியாளர் சண்முக சுந்தரம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி , பணிகள  மேற்பார்வையாளராக  வேலை பார்த்த பிரபாகரன் ஆகிய நான்கு பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிகழ்வை நமது  நக்கீரன் இணையத்தில் செய்தியாக்கியிருந்தோம். 

 

இந்தநிலையில்தான் அடுத்தடுத்து இரண்டு பெண் ஊழியர்கள் யூனியன் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெயுடன் வந்து தீக்குளிக்க முயன்றனர். இது குறித்து சுகந்தா கூறுகையில், "தற்போது பணியாற்றிவரும் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் தொடர்ந்து ஆபாசமான வார்த்தைகளால் பேசுவதும்,  திட்டி தீர்ப்பதோடும் கட்டாத 844 கழிவறைகளையும் கட்டியதாக ஒப்புக்கொள்ள வேண்டும்  என்று கட்டாயப்படுத்துகிறார். ஆனால், நான் கட்டிய கழிப்பறை 337 மட்டும்தான், எப்படி ஒத்துக்கொள்ள முடியும், அவர் செய்த ஊழலுக்கு நான் எப்படி உடந்தையாக முடியும்.

 

2015 ல் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய கார்த்திகேயன் ரூ.80 லட்சம்  கட்டுமான பணிக்கான முன் தொகையை ஈடுகட்ட சொல்கிறார். அதோட எனக்கும் வேறு ஒருவருக்கும்  முறையற்றத் தொடர்பு உள்ளதாக எனது கணவரிடம் இல்லாதது பொல்லாததைக் கூறி மிரட்டுகிறார். ஒரு கழிவறை கட்டுவதற்கு ரூ.12,000. ஆனால், அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு கழிவறைக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சமாக எடுத்துக்கொண்டு மீதமுள்ள ரூ.9 ஆயிரம்தான் தருவாங்க. அதுலதான் கழிவறை கட்டனும்." என்கிறார்.

 

அதுதான் தற்போது குற்ற சாட்டாகவும் இருக்கிறது. கணினி  பிரிவு மையத்தில்  தற்காலிக பணியாளரான ஆனந்தி நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சி செய்ததை தொடர்ந்து மேலும் தற்காலிக பணியாளர் சுகந்தா தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ள சம்பவம் மன்னார்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் டூ ஏற்காடு; கொல்லப்பட்ட பெண் - உறைய வைக்கும் பின்னணி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Two youths were arrested in the case of the passed away of the young woman

சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் 40 அடி பாலம் அருகே மார்ச் 20 ஆம் தேதி, கடும் துர்நாற்றம் வீசுவதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. வனக்காவலர் பெருமாள் அங்கே சென்று பார்த்தபோது, வனப் பகுதிக்குள் 20 அடி பள்ளத்தில் ஒரு சூட்கேஸ் பெட்டி கிடப்பதும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதும் தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் ஏற்காடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். அதன்பேரில், ஆய்வாளர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். ஈக்களும் புழுக்களும் மொய்த்துக் கொண்டிருந்த அந்த மர்ம சூட்கேஸை கைப்பற்றினர். அதைத் திறந்து பார்த்தபோது, அந்த பெட்டிக்குள் அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் இருந்தது தெரிய வந்தது. கொலையுண்ட பெண் சுடிதார் டாப்ஸ் மற்றும் பேண்ட் ஆகிய உடைகளை அணிந்திருந்தார்.

தடயவியல் நிபுணர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று தடயங்களைச் சேகரித்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சடலத்தை கூராய்வு செய்தனர். மர்ம நபர்கள் இளம்பெண்ணை கொலை செய்து, சூட்கேஸ் பெட்டிக்குள் அடைத்து, நீண்ட நாள்களுக்கு முன்பே இந்தப் பகுதியில் வீசியிருக்க வேண்டும் என்பதால், சடலம் முற்றிலும் சிதிலம் அடைந்து இருந்தது. அதனால் சடலமாகக் கிடப்பது யார் என்று உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

தகவல் அறிந்த மாவட்டக் காவல்துறை எஸ்.பி., அருண் கபிலன், சேலம் புறநகர் டி.எஸ்.பி. அமலா அட்வின் நிகழ்விடம் விரைந்தனர். கொலையுண்ட நபர் யார் என்று தெரிந்துவிட்டால், கொலையாளியை எளிதில் நெருங்கி விட முடியும் என்பதால், முதலில் சடலமாகக் கிடந்த இளம்பெண் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினரை முடுக்கிவிட்டார் எஸ்.பி., சடலம் கிடந்த சூட்கேஸ் பெட்டி புதியதாகவும், பெரியதாகவும் இருந்தது. அந்தப் பெட்டியை விற்பனை செய்த கடையின் ஸ்டிக்கர் இருப்பது தெரிய வந்தது. அதை வைத்து விசாரித்தபோது, கோவையில் உள்ள லூலூ மால் வணிக வளாகத்தில் உள்ள டிராவல்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் கடையிலிருந்து வாலிபர் ஒருவர் அந்தப் பெட்டியை வாங்கிச் சென்றது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் விசாரித்தபோது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவக்கோட்டையைச் சேர்ந்த நடராஜ்(32) என்பவர்தான் அந்தப் பெட்டியை வாங்கிச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, இளம்பெண் கொலை வழக்கில் மர்ம முடிச்சுகள் அடுத்தடுத்து அவிழத் தொடங்கின. நடராஜை  கைது செய்து காவல்துறையினர், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் சினிமாவை விஞ்சும் திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.  சூட்கேஸ் பெட்டிக்குள் சடலமாகக் கிடந்தது, தேனி மாவட்டம் முத்துலாபுரத்தைச் சேர்ந்த சுபலட்சுமி (33) என்பதும், அவரைத் தான்தான் கொலை செய்து பெட்டியில் அடைத்து, ஏற்காடு மலைப் பகுதியில் வீசிச் சென்றேன் என்றும் ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டார் நடராஜ்.

கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தோம்.  பொறியியல் பட்டயப் படிப்பு முடித்துள்ள நடராஜ், பிரான்ஸ் நாட்டில் வேலை செய்து வந்தார். வெளிநாடுகளுக்கு பட்டதாரி இளைஞர்களை வேலைக்கு அனுப்பி வைக்கும் கன்சல்டன்சி நிறுவனமும் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு பெண் குழந்தைகளும் பரவக்கோட்டையில் வசிக்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பிரான்சில் வேலை செய்து வந்தபோது, மேட்ரிமோனி இணையதளத்தில் தனக்கு இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேவை என புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார். அப்போது கத்தார் நாட்டில் உள்ள ஒரு கணினி நிறுவனத்தில் வேலை செய்து வந்த, சுபலட்சுமியும் தன்னுடைய இரண்டாம் திருமணத்திற்கு மணமகன் தேவை என்றும், கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும், நடராஜ் பதிவு செய்திருந்த அதே மேட்ரிமோனி இணையதளத்தில் தனது புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணுடன் விவரங்களை பதிவு செய்திருந்தார்.

Two youths were arrested in the case of the passed away of the young woman

மேட்ரிமோனி இணையதளத்தின் மூலம் அறிமுகமாகிக் கொண்ட இருவரும், தினமும் செல்போன் மூலம் பேசி நட்பை வளர்த்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் அவர்களின் நட்பு எல்லை தாண்டி, திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இந்தியா திரும்பியதும் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தவும் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர்கள் இந்தியா திரும்பினர். இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்று சில நாள்கள் தங்கியிருந்து விட்டு, மீண்டும் வெளிநாட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பி விட்டனர். ஆனால் அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லாமல் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி, கோவை பீளமேட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

சுபலட்சுமி மீது காதல் வயப்பட்டு இருந்த நடராஜ், அவருடைய பெயரை தனது கையில் டாட்டூவாக குத்தி இருந்தார். இதற்கிடையே, கடந்த ஜனவரி 1ம் தேதி பரவக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று மனைவி, குழந்தைகளைப் பார்த்துவிட்டு மீண்டும் கோவை திரும்பினார் நடராஜ். கோவைக்கு வந்த நடராஜிடம், அவர் கையில் தனது பெயரின் டாட்டூ அழிக்கப்பட்டு இருந்தது குறித்து சுபலட்சுமி கேள்வி எழுப்பினார். பரவக்கோட்டையில் உள்ள தனது மனைவி, குழந்தைகளைப் பார்க்கச் சென்றதாகவும், அதனால் டாட்டூவை அழித்துவிட்டதாகவும் கூறியுள்ளார் நடராஜ். இதனால் ஜன. 1ம் தேதி இரவு அவர்களுக்குள் விடிய விடிய கடும் வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டுள்ளது.

குடிபோதையில் இருந்த நடராஜ், ஆத்திரத்தில் சுபலட்சுமியைப் பிடித்து இழுத்து அவருடைய தலையை சுவரில் மோதியுள்ளார். வீட்டில் இருந்த கட்டையாலும் அவருடைய தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சுபலட்சுமி, நிகழ்விடத்திலேயே பலியானார். அவர் இறந்துவிட்டதை அறிந்த நடராஜ், பதற்றம் அடைந்துள்ளார். இதையடுத்து அவர், பரவக்கோட்டையில் உள்ள தனது உறவுக்கார நண்பன் கனிவளவனை தொடர்பு கொண்டு, நடந்த சம்பவம் குறித்து கூறி உதவிக்கு அழைத்துள்ளார்.

காவல்துறையில் சிக்காமல் இருக்க, பெண்ணின் சடலத்தை மறைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள், கோவையில் உள்ள லூலூ மால் வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பெரிய அளவில் ஒரு டிராலி சூட்கேஸ் பெட்டியை வாங்கினர். அந்த பெட்டியில் சுபலட்சுமியின் சடலத்தை திணித்தனர். பிறகு ஒரு காரை வாடகைக்கு எடுத்த அவர்கள், அதில் சடலத்துடன் கூடிய பெட்டியை வைத்துக் கொண்டு, அவர்களே ஏற்காட்டிற்கு ஓட்டிச் சென்றுள்ளனர். இரவு நேரத்தில் காரை ஓட்டிச் சென்ற அவர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத 40 அடி பாலம் அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் சடலத்துடன் கூடிய சூட்கேஸ் பெட்டியை தூக்கி வீசியுள்ளனர்.

பின்னர் மலையேறிய அவர்கள், அங்கிருந்து குப்பனூர் வழியாக இரவோடு இரவாக காரில் தப்பிச் சென்றுவிட்டனர். இரண்டரை மாதங்களாகியும் இந்த சம்பவம் குறித்து வெளியே செய்திகள் ஏதும் பரவாத நிலையில், இனியும் தங்களுக்கு சிக்கல் ஏதும் வராது என்று நடராஜ் கருதினார். இதனால் அவர் மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்குச் செல்லத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். இந்நிலையில், சூட்கேஸ் பெட்டியில் இருந்த சின்ன தடயத்தால் காவல்துறை பிடியில் சிக்கிக் கொண்டார்.

இதற்கிடையே, சடலத்தை வீசிய நாளிலிருந்து நடராஜ் ஒரே இடத்தில் வசிக்காமல், கோவை, சென்னை, பரவக்கோட்டை என அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்துள்ளார். மார்ச் 20ம் தேதி, சடலம் கைப்பற்றப்பட்ட தகவல் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து, அவர் பிரான்ஸூக்குச் சென்று தலைமறைவாகி விடலாம் என்றும் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளையும் விரைவாகச் செய்து வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

சடலத்தை மறைக்கத் திட்டமிட்ட அவர்கள், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைப் பகுதியில் வீசிவிடலாம் எனக் கருதி அங்கு சென்றுள்ளனர். பின்னர் கள்ளக்குறிச்சி சேர்வராயன் மலைப் பகுதிக்கு வந்த அவர்கள், கடைசியாக ஏற்காடு மலையைத் தேர்வு செய்து, சடலத்தை வீசிச் சென்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நடராஜ், அவருடைய நண்பர் கனிவளவன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், ஏற்காடு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மார்ச் 24 ஆம் தேதி ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சடலம் கைப்பற்றப்பட்ட ஐந்தே நாள்களில், கொலையுண்ட பெண் யார் என்பதைக் கண்டறிந்து, கொலையாளிகளையும் கைது செய்த டிஎஸ்பி அமலா அட்வின், காவல் ஆய்வாளர்கள் செந்தில்ராஜ் மோகன், நாகராஜ், ஸ்ரீராம் தலைமையிலான தனிப்படையினரை சேலம் சரக டிஐஜி உமா, மாவட்ட எஸ்பி அருண் கபிலன் ஆகியோர் பாராட்டினர். 

Next Story

நகராட்சி அலுவலகம் முற்றுகை; அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அதிரடி கைது

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Municipal office siege; AIADMK MLAs arrested

 

கோவை மாட்டம், மேட்டுப்பாளையம் நகர்மன்றக் கூட்டம், அதன் தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் நேற்று முன் தினம் (31-10-23) நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பேசினர். அந்த வகையில், அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர், பொறியாளர்கள் வராதது குறித்தும், அவர்களது வார்டுகளில் குப்பைகளை அள்ளுவது தொடர்பாகவும் கேள்வி எழுப்பினர்.

 

இதில் அதிமுக மற்றும் திமுக க்வுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் தாக்கவும் முயற்சி செய்தனர். அப்போது திமுக கவுன்சிலர் ஒருவர் கூட்ட அரங்கில் இருந்த நாற்காலியை எடுத்து அதிமுக கவுன்சிலர்களை நோக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. 

 

மேலும், அதிமுக கவுன்சிலர்கள் சிலர் தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடக்கும் இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அதிமுக மற்றும் திமுக என இரு கட்சியினரும் மேட்டுப்பாளையாம் காவல்நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், இன்று (02-11-23) போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக கவுன்சிலர்களுக்கு ஆதரவாக அதிமுகவினர் அதிகளவில் திரண்டு வர இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸார் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.செல்வராஜ் மற்றும் பி.ஆர்.ஜி. அருண்குமார் தலைமையில் அதிமுகவினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த இரு எம்.எல்.ஏ.க்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல், 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தை நடத்திய 8 அதிமுக கவுன்சிலர்களையும் அதிரடி கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.