
மன்னார்குடி அருகே நூற்றாண்டுகளுக்கு மேலாக இறந்தவர்களின் சடலத்தை எடுத்துச் செல்ல, சாலை வசதியின்றி குளத்தில் நீந்தியும், நடவு வயல்களைக் கடந்தும் செல்ல வேண்டிய அவல நிலை இருப்பதாகப் பொதுமக்கள் வேதனை அடைகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தேவங்குடி அக்ரஹார தெரு மற்றும் மேட்டுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் யாராவது உயிரிழந்துவிட்டால் உடலை அடக்கம் செய்வதற்கு, சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வயல் காடுகளையும், இடையில் உள்ள குளத்தையும் தாண்டி செல்லும் அவலமே சுமார் 100 ஆண்டு காலத்திற்கு மேலாக இருந்துவந்துள்ளது. குளத்தில் தண்ணீர் இருந்தாலும் உள்ளே இறங்கிதான் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யச் சுடுகாட்டிற்குக் கொண்டு செல்லவேண்டிய நிலை இருக்கிறது.
“கோடை காலங்களில் உயிரிழப்பு ஏற்பட்டால் சிரமம் தெரிவதில்லை. ஆனால் மழை காலம் என்றால் படாத துன்பத்திற்கு ஆளாகியே அடக்கம் செய்யவேண்டிய நிலமை இருக்கிறது.” என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
இந்நிலையில் மேட்டுத்தெரு அக்ரஹார தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் திடீரென உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது இறுதிச் சடங்கிற்கு சடலத்தை எடுத்துச் செல்ல வழியின்றி அந்தக் கிராம மக்கள் குளத்திலும், நடவு வயல்களிலும் இறங்கி, இறந்தவரின் உடலை சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது.
"இந்த நிலமையால் இறந்தவரின் இறுதிச் சடங்கைக் கூட முறையாகச் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுது. அதனால் சுடுகாட்டிற்குச் செல்ல சாலை வசதி அமைத்துத் தர வேண்டி, பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்தும் இதுவரையிலும் அரசு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. நடவு வயலில் இறங்கிதான் கரையேற வேண்டியுள்ளது. 100 ஆண்டுகாலமாக அனுபவித்து வரும் சிரமத்தைப் போக்கும் வகையில் சுடுகாட்டுச் சாலை அமைத்துத் தரவேண்டும்." என்கிறர்கள் அப்பகுதி மக்கள்.