Skip to main content

மேகதாது அணைவிவகாரத்தை தமிழக அரசியல் கட்சியினர் மறந்துவிட்டனர்- மனியரசன் குற்றச்சாட்டு

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

 

 மேகதாது விவகாரத்தைப்பற்றி சிந்திக்காமல் குப்பையில் போட்டுவிட்டு பதவியை பங்குபோட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர் தமிழக அரசியல்வாதிகள் என குற்றம் சாட்டியுள்ளார் மணியரசன்.

 

m

 

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, " கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே 9 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்ட உள்ளது.  அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்து விட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய நீர்ப்பாசன துறை அதிகாரிகள் கர்நாடக மாநிலத்துக்கு சென்று இடத்தை பார்வையிட்டு ஒப்புதல் வழங்கி உள்ளனர். இதனால் சுமார் 70 ஆயிறம் டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசால் தேக்கிவைக்க முடியும். அந்த மாநிலத்துக்கான நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார், ஐந்து ஆண்டுகளுக்குள் மேகதாது அணையை கட்டி விடுவோம் எனவும் உறுதிபட தைரியமாக கூறியுள்ளார்.

 

அவ்வாறு செய்தால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது, காவிரி டெல்டா பாலைவனமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். இதைப் பற்றி கவலை கொள்ள தமிழக அரசியல் கட்சிகளுக்கு நேரமில்லை. மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவோ அதனைப் பற்றி பேசவோ நேரமில்லாமல், தேர்தலை குறிவைத்து நகர்கின்றனர். இதுபற்றி எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் சிந்திக்காமல் பதவியை பங்கு போட்டுக்கொள்வதில் நேரத்தை ஒதுக்கி கொள்கின்றனர்.

 

 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து யாருக்கு பதவி கிடைக்கும் என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பதவியை பங்குபோடுவதிலேயே தமிழக தலைவர்கள் ஆர்வமாக உள்ளனர். கர்நாடக அரசோ சுயநலத்தோடு அணை கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு மக்கள் முன்வரவேண்டும்."என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் வருகை; பக்தர்கள் அவதி!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Governor's visit to Thiruphuvanam Kambakareswarar Temple; Devotees suffer

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (02.02.2024) குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி வருகையால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், தரிசனத்துக்கு தாமதமாவதாக பக்தர்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தரிசனத்துக்குப் பின்னர்தான் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.