கரோனா தாக்கத்தால் வீட்டு வாடகை வசூலிக்கத் தடைவிதிக்க அரசாணை பிறப்பிக்கக் கோரிய வழக்கை மனுதாரர் வாபஸ் பெற்றதால், அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவில், கரோனா தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தைக் கருத்தில் கொண்டு, குடியிருப்புவாசிகளிடம் இருந்து நிலம் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு வாடகை கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மார்ச் 29-ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவைப் பின்பற்றி, தமிழக அரசு பேரிடர் மேலாண்மை சட்டம், அவசர கால, பெருந்தொற்று நோய்த் தடுப்பு அவசரகாலச் சட்டத்தின் கீழ், வாடகை வசூல் செய்வதற்குத் தடை விதித்து அரசாணை வெளியிட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணை வெளியிட்ட சமயத்தில், 15 நாட்கள் வரைதான் ஊரடங்கு அமலில் இருந்தது. இப்போது, ஊரடங்கு காலம் 60 நாட்களுக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டுள்ளதால், மூன்று மாதத்திற்கு வாடகை வசூலிக்கக் கூடாது என்று வீடு மற்றும் நில உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இதுபோல் தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் வாடகைதாரரோ வீட்டு உரிமையாளரோ, யாரும் வழக்குத் தொடரவில்லை என்று தெரிவித்ததுடன், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தார். இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.