man who went to bathe in the Chidambaram temple pool drowned

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவில் பழம்பெரும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை மாலை திருநீலகண்ட நாயனாரின் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவில் குளத்தில் இறங்கி சுவாமி மற்றும் பக்தர்கள் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலர் குளக்கரையில் கூடியிருந்தனர். சுவாமிக்கு குளக்கரையில் பூஜை நடந்து தீர்த்தவாரி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து அங்கிருந்து பக்தர்களும் பொதுமக்களும் குலத்தில் நீராடச் சென்றனர் அப்போது கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன்(47) என்பவர் கோயில் குளத்தில் இறங்கி நீராடினார். சிறிது தூரம் தண்ணீரில் நீந்தி சென்று குளத்தின் நடுவே உள்ள மண்டபம் அருகே நீரில் மூழ்கியுள்ளார். மீண்டும் அவர் வெளியே வரவில்லை.

இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பெயரில் நகர காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட வெங்கடேசனை குளத்தில் இறங்கி ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர் தொடர்ந்து ஒரு மணி நேரம் தேடிய நிலையில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. இது குறித்து சிதம்பர நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளத்தில் மூழ்கிய தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.