Skip to main content

‘நண்பா.. ஓ.. நண்பா...’ - மது உருவாக்கிய பகை; அரங்கேறிய கொடூரம்

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
man who incident his friend for liquor in Coimbatore

கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகே அமைந்துள்ளது நந்தனார் காலனி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். 50 வயது மதிக்கத்தக்க இவர், தான் வசிக்கும் அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, தனது கடையில் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து, போலீசாருக்கு தெரியாமல் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், இதில் வரும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தை பாதுகாத்து வந்தார்.   

இந்நிலையில், அதே நந்தனார் காலனியைச் சேர்ந்தவர் கணேசன். கோவையில் அரசு மருத்துவமனையில்  தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரும் டீக்கடை வைத்திருக்கும் மணிகண்டனும் நண்பர்களாக இருந்து வந்தனர். மணிகண்டன் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யும்போது கணேசன் அவருக்கு உதவியாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் தனது நண்பனான மணிகண்டனின் டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மணிகண்டனிடம் கணேசன் மது கேட்டுள்ளார். ஆனால், ‘சரக்கெல்லாம் கொடுக்க முடியாது. பணம் கொடுத்தா மட்டும்தான் கொடுக்க முடியும்’ எனக் கறாராக கூறியுள்ளார்.  இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில், இந்த வாக்குவாதம் முற்றி மணிகண்டனும் கணேசனும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பினர். ஆனால், கணேசனுக்கு மணிகண்டன் மீது ஏற்பட்டிருந்த கோபம் நிலையாக இருந்துள்ளது. இந்நிலையில், கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யும் மணிகண்டனின் தொழிலை தடுக்கும் விதமாக மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார், நந்தனார் காலனி பகுதியில் உள்ள மணிகண்டன் கடையை அகற்றக் கோரி பொள்ளாச்சி நகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.  

அதன்பேரில் அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட அதிகாரிகள், மணிகண்டன் கடையை அகற்றக்கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அப்போது, தனது கடையை அகற்றுவதற்கு கணேசன்தான் காரணம் என நினைத்துக்கொண்ட மணிகண்டன், அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி மாலை கணேசன் தனது வேலையை முடித்துக்கொண்டு வழக்கம்போல் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென குறுக்கே வந்த மணிகண்டன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் திடீரென ஆத்திரமடைந்த மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த ரீப்பர் கட்டையால் கணேசனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த கணேசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.       

ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் படுகாயமடைந்த கணேசனை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, முன்விரோதத்தால் கணேசனை தாக்கிய மணிகண்டனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பிறகு, மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  மதுவால் ஏற்பட்ட தகராறில் நண்பனை ரீப்பர் கட்டையால் அடித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.