
பண்ருட்டி அருகே திருமண செலவுக்கு பணம் கொடுக்காத ரேஷன் கடை ஊழியரை புது மாப்பிள்ளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது மாளிகைமேடு என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் திலீப்குமார். இவர் வல்லத்தில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை வெளியே சென்ற திலீப் குமார் வீடு திரும்பவில்லை. இதனால் பல இடங்களில் அவரது குடும்பத்தினர் தேடி உள்ளனர். ஆனால் பல மணி நேரத் தேடுதலுக்குப் பின்பு வீட்டிற்கு அருகிலேயே உள்ள கரும்புத் தோட்டம் ஒன்றில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக திலீப்குமார் கிடந்தார்.
மேலும் அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலி மற்றும் செல்போன் ஆகியவை காணாமல் போயிருந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பண்ருட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். செய்யப்பட்ட விசாரணை அடிப்படையில் அரவிந்த் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அரவிந்த் என்ற இளைஞனுக்கு அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் திருமண செலவுக்காக திலீப் குமாரிடம் பண உதவி கேட்டுள்ளார். ஆனால் திலீப் குமார் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த் திலீப் குமாரை கொலை செய்து அவரிடம் இருந்த நகைகள், செல்போன்களை பறித்தது விசாரணையில் தெரியவந்தது.
Follow Us