Skip to main content

வாலிபரை கடத்தி ரூ. 80 லட்சம் கேட்டு மிரட்டல்; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

man was kidnapped and threatened with 80 lakhs in Dharmapuri

 

தர்மபுரி அருகே வாலிபரைக் கடத்தி வைத்துக்கொண்டு 80 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டும் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  

 

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் கூத்தப்பாடி மடம் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவருடைய மகன் விஸ்வநாதன் (37). மும்பையில் நொறுக்குத்தீனி கடை வைத்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த விஸ்வநாதன் இங்கேயே தங்கிவிட்டார். ஆனால், உள்ளூரில் நிரந்தரமான வேலை கிடைக்காததால் அவ்வப்போது கிடைத்த வேலைகளைச் செய்து வந்தார்.  

 

இந்நிலையில், டிச. 12 ஆம் தேதி காலை பென்னாகரம் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற விஸ்வநாதன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அவருடைய அலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதற்றம் அடைந்த அவருடைய மனைவி மஞ்சுளா, கணவர் மாயமானது குறித்து ஒகேனக்கல் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.  

 

அந்தப் புகார் மனுவில், “என் கணவரின் செல்போனில் இருந்து அவருடைய தம்பி பூபதிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், விஸ்வநாதனை கடத்தி வைத்திருப்பதாகவும், 80 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் விடுவிப்போம். இல்லாவிட்டால், கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். இதேபோல மூன்று முறை மிரட்டினர். என் கணவரை அவர்களிடம் இருந்து மீட்டுக்கொடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

 

அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். காவல் ஆய்வாளர் மகேந்திரன் தலைமையிலான தனிப்படையினர் கடத்தல்  கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, பூபதிக்கு வந்த செல்போன் அழைப்பின் அடிப்படையில் மர்ம நபர்கள் எந்த டவர் எல்லையில் இருந்து பேசினர்? விஸ்வநாதன் காணாமல் போவதற்கு முன்பு அவருடைய செல்போனில் பதிவாகி உள்ள அழைப்புகளின் விவரங்களையும் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.