Skip to main content

கரோனாவின் கொடூரம்! தற்கொலைக்கு முயன்ற நபர்! 

Published on 13/04/2022 | Edited on 13/04/2022

 

Man in tragedy by private bank

 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் வேல்முருகன். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று இவர் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் மாட்டு சந்தை பகுதியில், கை மற்றும் கழுத்தில் வெட்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வேல்முருகனை மீட்டு, விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  


வேல்முருகன் கழுத்தில் பிளேடு கொண்டு அறுக்கப்பட்டு இருந்ததால், கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்களா? அல்லது தற்கொலைக்கு முயன்றரா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் வேல்முருகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  கோயமுத்தூரில் பேக்கரி கடை நடத்துவதற்காக, கோயம்புத்தூர் ராம்நகர் பகுதியில் இயங்கி வரும், பிரபல தனியார் வங்கியில் 15 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். பேக்கரி கடை தொடங்கிய பின்பு, கரோனா வைரஸ் தொற்று காலம் ஆரம்பித்ததால் பேக்கரி தொழில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் தொடர்ச்சியான ஊரடங்கு மற்றும் தொழிலில் நஷ்டம், வங்கியின் தொல்லை என பல்வேறு இன்னல்களை  சந்தித்த வேல்முருகன், பேக்கரி தொழிலை கைவிட்டு, பெங்களூரில் உள்ள சாய்பாபா காலனியில் இயங்கி வரும் பேக்கரி கடையில் மாத சம்பளத்திற்கு சேர்ந்துள்ளார். மாத சம்பளத்தை வைத்துக் கொண்டு வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாததால், தொடர்ச்சியாக அந்த வங்கி கொடுத்த அழுத்தம், மற்றும் குடும்ப சூழ்நிலை என பல்வேறு காரணங்களால், மன உளைச்சல் அடைந்த வேல்முருகன் பெங்களூரிலிருந்து விருத்தாசலம் வழியாக ஊருக்குச் செல்ல வந்தவர், விருத்தாச்சலம் மாட்டு சந்தை பகுதிக்கு சென்று தான் வைத்திருந்த பிளேடால் தனது கை மற்றும் கழுத்தை தானே அறுத்துக் கொண்டு, தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. 


இதுகுறித்து விருத்தாச்சலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதிகமாக காயம்பட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு சென்றனர். வங்கியில் வாங்கிய கடனை கட்டமுடியாமல், ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் விருத்தாச்சலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.