Skip to main content

கரோனாவின் கொடூரம்! தற்கொலைக்கு முயன்ற நபர்! 

Published on 13/04/2022 | Edited on 13/04/2022

 

Man in tragedy by private bank

 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் வேல்முருகன். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று இவர் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் மாட்டு சந்தை பகுதியில், கை மற்றும் கழுத்தில் வெட்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வேல்முருகனை மீட்டு, விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  


வேல்முருகன் கழுத்தில் பிளேடு கொண்டு அறுக்கப்பட்டு இருந்ததால், கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்களா? அல்லது தற்கொலைக்கு முயன்றரா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் வேல்முருகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  கோயமுத்தூரில் பேக்கரி கடை நடத்துவதற்காக, கோயம்புத்தூர் ராம்நகர் பகுதியில் இயங்கி வரும், பிரபல தனியார் வங்கியில் 15 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். பேக்கரி கடை தொடங்கிய பின்பு, கரோனா வைரஸ் தொற்று காலம் ஆரம்பித்ததால் பேக்கரி தொழில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் தொடர்ச்சியான ஊரடங்கு மற்றும் தொழிலில் நஷ்டம், வங்கியின் தொல்லை என பல்வேறு இன்னல்களை  சந்தித்த வேல்முருகன், பேக்கரி தொழிலை கைவிட்டு, பெங்களூரில் உள்ள சாய்பாபா காலனியில் இயங்கி வரும் பேக்கரி கடையில் மாத சம்பளத்திற்கு சேர்ந்துள்ளார். மாத சம்பளத்தை வைத்துக் கொண்டு வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாததால், தொடர்ச்சியாக அந்த வங்கி கொடுத்த அழுத்தம், மற்றும் குடும்ப சூழ்நிலை என பல்வேறு காரணங்களால், மன உளைச்சல் அடைந்த வேல்முருகன் பெங்களூரிலிருந்து விருத்தாசலம் வழியாக ஊருக்குச் செல்ல வந்தவர், விருத்தாச்சலம் மாட்டு சந்தை பகுதிக்கு சென்று தான் வைத்திருந்த பிளேடால் தனது கை மற்றும் கழுத்தை தானே அறுத்துக் கொண்டு, தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. 


இதுகுறித்து விருத்தாச்சலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதிகமாக காயம்பட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு சென்றனர். வங்கியில் வாங்கிய கடனை கட்டமுடியாமல், ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் விருத்தாச்சலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.